“சமூகங்களில் இடுக்கு முடுக்குகளெல்லாம் குறைகளைக் கண்டறிந்து அவைகளை அபிவிருத்தி செய்வதே எமது இலக்கு. சரி செய்யவேண்டிய எத்தனையோ தேவைகளை விட்டுவிட்டு நகர்ப் புறங்களை மட்டும் பார்ப்பது நியாயமற்றது.” என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
சம்மாந்துறை செந்நெல் கிராமம் பிரதேசத்தில் (28) இடம்பெற்ற ‘செமட செவன’ வீட்டுத்திட்ட பயனாளிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டமானது. நாடு முழுவதிலும் செழிப்படையவுள்ளமை மகிழ்வுக்குரியதே!
2500 வீடுகள் நிறைவடைகின்ற காலகட்டத்தில் அதற்கு மேலதிகமாக உள்ளடங்கும் வகையில் ஹிஜ்ராபுரம் வீட்டுத்திட்டம், செந்நெல் கிராமம் 01 இல் குறித்த வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது. இதன்மூலம் 45 பயனாளிகள் பயனடைகின்றனர்.
5 இலட்சம் அரசாங்கத்தின் உதவு தொகையாகவும் மிகுதிப் பணம் வீட்டு உரிமையாளரின் முயற்சியிலும் மேற்கொள்ளப்பட்டு முழுமையான வீட்டினைப் பயனாளி பெற்றுக் கொள்ளும் ‘செமடசெவன’ திட்டமே இதுவாகும்.
இது மட்டுமல்லாமல் இப் பிரதேசத்துக்கான மின் இணைப்பு, குடிநீர் வசதிகளையும் மிக விரைவில் வழங்கவுள்ளோம். எமது பிரதேசத்தில் இன்று அபிவிருத்திகள் இரட்டைக் காம்புவிட்டு வியாபித்துள்ளன. இறைவன் உதவியினால் பல அமைச்சர்களின் பங்களிப்புக்களாலும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றேன். மக்கள் எந்தக் காலத்திலும் தேவையுடையாராக இருக்கக்கூடாது. மாறாக நாமும் அபிவிருத்தியின் பங்களார்களாக மாற வேண்டும். அதுவே சிறந்த வளர்ச்சி.
அவ்வாறான சுகாதாரமான அபிவிருத்தியை விதை போடும் தளமாக எனது சேவைகள் மலரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றார்.
