அதிக விலைக்கு கோதுமை மா விற்பனை செய்தால் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும், இதன்பிரகாரம் கோதுமை மா மற்றும் பால் மா ஆகியவற்றுக்காக விலைப் பட்டியல்களை அறிமுகப்படுத்துவதற்கு தாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், கைத்தொழில் வர்த்தக அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தல், கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி பதில் அமைச்சர் புத்திக்க பத்திரன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தற்பொழுது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு, இதற்கான ஆலோசனைகளை வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் பால் மா மற்றும் கோதுமை மா நிறுவனங்களுக்கு, அவை விரும்பிய வகையில் விலைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிகரித்த கோதுமை மாவின் விலையை, உடன் விளக்கிக் கொள்ளுமாறு, தான் இந்த நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவை மற்றும் வாழ்க்கைச் செலவு குழுவும் இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவித அறிவிப்பும் இன்றி மேற்கொள்ளப்பட்ட கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில், பாவனையாளர் அதிகார சபையினால் தற்போது முற்றுகை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த பதில் அமைச்சர், அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்த சுமார் 100 வர்த்தகர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோதுமை மா நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில், தாம் செயற்படுவதற்கு தயார் இல்லை என்றும் பதில் அமைச்சர் புத்திக்க பத்திரன மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.