அவர் மேலும் தெரிவித்ததாவது
நிறைவேற்று அதிகாரம் என்பதே ஒருவகையில் சர்வாதிகாரம்தான். இதனை கொண்டு வந்தது ஐக்கிய தேசியக்கட்சி. இந்த அதிகாரத்தை வைத்து ஜே ஆர் ஜெயவர்த்தன மிகப்பெரும் அநியாயங்களை செய்தார்.
ஜனாதிபதி முறை என்பது சர்வாதிகாரம் என்றிருந்தும் அதே சர்வாதிகார ஜனாதிபதி முறையை தலைவர் அஷ்ரப் புத்திசாலித்தனமாக கையாண்டார். அவ்வாறு புத்திசாலித்தனமாக இதனை கையாளும் திறமை பாராளுமன்றில் உள்ள முஸ்லிம் கட்சிகளிடம் இல்லாமல் இருப்பது பெரும் குறையாகும்.
இன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட சர்வாதிகார ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் ஐ தே கட்சி மற்றும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெரும் பங்குண்டு. ஆனாலும் இந்த ஜனாதிபதி முறையை பயன்படுத்தி ஐ தே க முஸ்லிம்களின் பிரச்சினைகளில் ஒன்றையாவது இந்த மூன்றரை வருடத்துள் தீர்த்ததா?
ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால எந்த விடயத்திலும் முழுக்க முழுக்க சர்வாதிகாரத்தை பயன் படுத்தவில்லை. ரணிலை சுதந்திரமாக ஆட்சி செய்ய விட்டார். அவர் ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நிறுத்தி மஹிந்தவை பிரதமர் ஆக்கியது சர்வாதிகாரம் என்றால் சந்திரிக்காவும் இதனை செய்த போது அதாவது ரணிலை நிறுத்தி மஹிந்தவை பிரதமராக்கிய போது அப்போது சந்திரிக்காவுக்கு முஸ்லிம்கள் ஆதரவளித்ததை நாம் மறக்க முடியாது.
இந்த நாட்டில் ஜனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்கும் பெரும்பாலான சிங்கள மக்கள் போராடியுள்ளனர். பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கவும் பெரும்பாலும் சிங்கள மக்களே தம் உயிர் கொடுத்தனர். முஸ்லிம்களும் இதற்கு தோள் கொடுத்தனர்.
ஆகவே நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைவரும் பாடுபடத்தான் வேண்டும் என்றிருந்தாலும் பெரும்பாலன சிங்கள மக்களை எதிர்த்துக்கொண்டு ஜனநாயகத்தை காக்கப்போவதாக முஸ்லிம்கள் கச்சை கட்டி நிற்பது நல்லதல்ல. இது விடயத்தில் சிங்கள மக்கள் முன்னே போனால் நாம் பின்னால் போகலாமே தவிர நாம் முன்னே நிற்பதை தவிர்க்க வேண்டும் என ஸ்ரீ லங்கா உலமா கவுன்சில் கேட்டுக்கொள்கிறது.