- மு.கா. வின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்-
இன்று நமது நாட்டில் நடைபெறும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் கொண்ட கொள்கைகளை கட்சி விட்டுக் கொடுக்காமலும் மாற்றுக் கட்சிகளுக்கு விலை போகாமலும் எமது சமுதாயத்தை காட்டிக் கொடுக்காமல் உண்மையின் பக்கம் நின்று ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் இலங்கை யாப்புச் சட்டத்திற்கு முரணாகவும் செயற்படுவதை தடுத்தி நிறுத்தி உள்ளமைக்கு எமது கட்சியும் காரணமாக அமைந்துள்ளது. இதற்காக நமது கட்சித் தலைமைத்துவத்திற்கு நாம் நன்றி கூறுவதுடன் கட்சித்தலைவரையும் அன்னாரின் கரத்தையும் பலப்படுத்துவது நமது கட்சிப் போராளிகளின் கடமையாகும் எனத் தெரிவித்தார் மு.கா. வின் பிரதித் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள்.அண்மையில் அட்டாளைச்சேனை மு.கா.வின் மத்திய குழுக்கூட்டம் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஏ.எல்.எம். நசீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது இன்றைய சமகால அரசியல் நிலவரங்கள் பற்றி பேசுகையில் சட்டத்தரணி கபூர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய அரசியல் கொந்தளிப்புக்கும் ஸ்தீரமற்ற தன்மைக்கும் முழுக் காரணம் எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களே என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதற்கு வேறு யாரும் காரணமுமில்லை. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்து விட்டு ஏனைய மற்றவர்கள் மீது குறை சொல்லி குற்றம் சொல்வதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கபூர் அவர்கள் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.
மேற்படி கூட்டத்தில் மு.கா. வின் அரசியல் உயர்பீட உறுப்பினர்களான யு.எல்.எம். வாஹித், ரியால் மசூர் போன்றவர்கள் உட்பட அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் வட்டார அமைப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.