ஏ. எல். ஆஸாத்-
இலங்கையின் பிரபல ஊடகவியலாளரும், சிலோன் முஸ்லிம் ஊடக வலயமைப்பின் பிரதானியும், மனித உரிமை மற்றும் நீதி - நல்லிணக்க செயற்பாட்டாளருமான பஹத் ஏ.மஜீத் அவர்களின் கார் இன்று (20) தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து எமது செய்தியாளருக்கு அவர் வழங்கிய தகவல்களை இணைக்கிறோம்,
நேற்று இரவு (19) சிறிய பழுது காரணமாக அட்டாளைச்சேனை கோணாவத்தை வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எனது கார் இன்று காலை முழுமையாக தீப்பற்றியிருந்தது, இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மற்றும் அம்பாறை இரசாயன பரிசோதனை பிரிவு (SOCO) ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.
என் மீதான தாக்குதல்கள், எனக்கு புதிதல்ல அதுவும் சிலோன் முஸ்லிமிற்கும் புதிதல்ல நாங்கள் கடமையை சரியாக செய்கிறோம், இலங்கை முஸ்லிம்களுக்காக சர்வதேச ரீதியில் குரல்கொடுக்கிறோம் அந்தப் பணி நிறைவு பெறாது என்றார்.
சிலோன் முஸ்லிம் ஊடக அலுவலகம் கடந்த 2017.06.11 அன்று விசமிகளால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்கள் வன்முறைக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அதனை சர்வதேச மயப்படுத்த ஜெனீவா வரை கொண்டு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.