குறிப்பாக இரவு நேரங்களில் வைத்தியசாலைகளில் காவலாளிகள் இல்லாத காரணத்தினால் அடிக்கடி சில சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது தொடர்பாக கடந்த காலங்களில் கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் எழுத்து மூலமான பல வேண்டுகோள்களையும் விடுத்திருந்ததாக அறியமுடிகின்றது.
எனினும் தற்போது அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் முன்னெடுத்து, தனியார் பாதுகாப்பு சேவையை நடாத்தும் நிறுவனமொன்றிற்கு அந்தப் பொறுப்பு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது சிபாரிசினை ஏற்கனவே மகாகாணப் பணிப்பாளருக்கும் அனுப்பியிருந்தார். அந்த வகையில், கல்முனை சுகாதார பிராந்தியத்திலுள்ள சகல 13 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கும் மற்றும் சகல பிரதேச வைத்தியசாலைகளுக்கும் இரவு நேரத்தில் அதாவது இரவு 6 மணி தொடக்கம் மறுநாள் காலை 6 மணி வரை பாதுகாப்பு சேவை வழங்கப்படுகிறது. அதேபோன்று, மாகாண சபையின் கீழ் வரும் ஆதார வைத்தியசாலைகளுக்கும் இரவு, பகல் இரண்டு நேரங்களுக்கும் பாதுகாப்பு சேவை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.