இராணுவம் தொடர்பான எதிர்மறை எண்ணத்தை கை விடுங்கள்

தமிழ் அரசியல்வாதிகளுக்கு யாழ். கட்டளை தளபதி கோரிக்கை இணைந்து செயற்படவும் பகிரங்க அழைப்பு

ராணுவம் தொடர்பான எதிர்மறை எண்ணங்களை கை விட்டு. தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தின் மனித நேய செயற்பாடுகளுக்கு கை கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வியலை முன்னேற்றுவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முன்வரல் வேண்டும் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி பகிரங்க அழைப்பு விடுத்து உள்ளார்.
படை தரப்பினரின் உதவியுடனேயே தமிழர் பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்புகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் வைத்து வட மாகாண முதலமைச்சர் ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் நேரடியாக குற்றம் சுமத்தி உள்ளதுடன் இராணுவம் தொடர்பாக நீண்ட ஒரு குற்ற பத்திரத்தை வாசித்தும் உள்ளார்.
முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் முன்வைத்து உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வா யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை நேற்று வெள்ளிக்கிழமை வினவினார். மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இவருக்கு வழங்கிய விளக்கத்திலேயே இராணுவம் தொடர்பான எதிர்மறை எண்ணங்களை தமிழ் அரசியல்வாதிகள் கை விடல் வேண்டும் என்று கோரியதாக செல்வாவின் ஊடக பிரிவு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளவை வருமாறு:-

படை தரப்பினரின் உதவியுடனேயே தமிழர் பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்புகள் இடம்பெறுவதாக முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயா நேரடியாக குற்றம் சுமத்தி உள்ளதுடன் இராணுவம் தொடர்பாக நீண்ட குற்ற பத்திரத்தை வாசித்தும் உள்ளார். இவை தொடர்பில் இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை வினவினார். இவருக்கு வழங்கிய விளக்கத்திலேயே இராணுவம் தொடர்பான எதிர்மறை எண்ணங்களில் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் விடுபட்டு, தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தின் மனித நேய செயற்பாடுகளுக்கு கை கொடுப்பதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாழ்வியலை முன்னேற்ற முன் வர வேண்டும் என்று மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறுவதாக சொல்லப்படுகின்ற நில ஆக்கிரமிப்புகளுக்கும் இராணுவத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என்றும் கூறிய யாழ். மாவட்ட கட்டளை தளபதி இவ்வாறான அடிப்படை எவையும் அற்ற குற்றச்சாட்டுகளை தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் முன்னிலைக்கு வைப்பது அழகு அல்ல என்றும் சொன்னார்.

மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவிக்கையில் விக்னேஸ்வரன் ஐயாவை நாம் மதிக்கின்றோம், அவருடன் சேர்ந்து செயற்பட எப்போதும் தயாராகவே உள்ளோம், ஆயினும் அவரை போன்ற கனவான்களும் உண்மைகளை தீர விசாரித்து அறியாமல் அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது கவலை தருகின்றது என்றார்.

இவர் மேலும் கூறுகையில் தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் நியாயமான விருப்பங்களுக்கு எதிராக இராணுவம் ஒருபோதும் செயற்பட மாட்டாது, போருக்கு பிந்திய அமைதி சூழலில் மனித நேய அமைதி படையாகவே இராணுவம் தமிழர் பிரதேசங்களில் செயற்பட்டு வருகின்றது, மட்டும் அல்லாமல் போருக்கு பின்னர் மனித நேய அமைதி படையாக இராணுவம் செயற்பட வேண்டிய விதத்துக்கு இலங்கை இராணுவம் உலக அளவிலேயே முன்னுதாரணமாக விளங்குகின்றது, மேலும் தமிழர் பிரதேசங்களில் மனித நேய செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருவதற்கு பின்னால் வேறு விதமான எந்த உள்நோக்கங்களும் கிடையாது என்பதை தமிழ் அரசியல்வாதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இத்தருணத்தில் சொல்லி வைக்கின்றேன் என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -