Mohamed Nizous
கேட்ட பயான் என்ன
போட்ட தொப்பி என்ன
ஷவ்வால் பிறை வானில் தோன்ற
வெளவால் போல் தலை கீழ் என்ன
ரமழானிலே பக்தி
ராவையிலே தஹஜ்ஜத்
அமல்கள் செய்த சில பேர்
அடுத்த பக்கம் பாய்வார்
எடுத்த பயிற்சி மறப்பார்.
நாடியிலே தாடி
நல்லா பக்தி கூடி
பெரு நாள் இரவு சலூனில்
ஒரே வழியாய் வழிப்பார்
நபி வழியை மறப்பார்
பெரு நாளில் கூடி
பியர் அடிக்கும் போதே
பயம் பக்தி எல்லாம்
பஞ்சாகிக் பறக்கும்
பாவம் மனதை நிறைக்கும்
முன் வரியைப் பிடித்து
முப்பது நாள் தொழுதோர்
பெரு நாளின் பின்னால்
முக வரியைக் காணோம்
முக வரியைக் காணோம்
கஞ்சிக் கோப்பை கழுவி
கவிழ்த்து வைக்கும் போதே
பக்தியையும் கவிழ்த்து
பழைய படி திரிவார்
பழைய படி திரிவார்.
ரமழானில் இருந்த
ரஹ்மான்தான் தொடர்ந்தும்
இருக்கின்றான் ஆனால்
இவர் அதனை மறப்பார்
இஷ்டத்துக்கு நடப்பார்.