சுழிபுரம் மாணவி றெஜீனாவின் உடற்கூற்று பரிசோதனைகள் முடிவடைந்து, உடல் பெற்றோரிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். சிறுமியை கொலை செய்யும் நோக்குடனேயே கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டுள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுழிபுரம்த்தை சேர்ந்த சிவனேஸ்வரன் றெஜீனா (6) என்ற சிறுமி நேற்று (25) தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது கொலை தொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து, பலத்த கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நேற்று மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் தலைமையில் மருத்துவ பீட மாணவர்களின் முன்பாக உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
“சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். அவரை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கம் கொலைகாரருக்கு இருந்திருக்கவில்லை என்பது பரிசோதனையின் மூலம் உறுதியாகிறது. சிறுமியைக் கொலை செய்வதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது” என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.