கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் ரசாக் ஆகியோர் தலைமையில் இன்று (24) வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜெலீல், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், ஏ.எம். றினோஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கடந்த ஆண்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு இவ்வாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் கல்முனை பிரதேச செயலக பிரதேசத்தில் அரச காணிகளை அத்துமீறி ஆக்கிரமிப்பவர்கள் தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஒருங்கிணைப்புக் குழுவின் கிளைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இக்குழுவின் உறுப்பினர்களாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜெலீல் ஆகியோர் செயற்படவுள்ளனர்.
அத்தோடு கல்விப் பொதுத் தராதர சாதாரன தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயமானது அகில இலங்கையில் 8வது இடத்தையும் தமிழ் மொழி மூலம் அகில இலங்கையில் 1வது இடத்தையும் பெற்றுள்ளது. இவ்வடைவு மட்டத்தை மேலும் அதிகரிப்பதற்கு ஏதுவாக மாதிரி பரீட்சை உள்ளிட்ட செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக கல்வி உபகார நிதியம் ஒன்று இதன்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தின் நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களின் உதவியின் ஊடாக இந்நிதியத்திற்கான நிதி உதவிகளை பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.