நாங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை-திலகராஜ்

தலவாக்கலை பி.கேதீஸ்-

சுமை யுகத்தில் விவசாயத்திலும், நீல யுகத்தில் கடற்றொழிலிலும், கைத்தொழில் யுகத்தில் பொருளுற்பத்தியிலும், சிவப்பு யுகத்தில் அரசியலிலும், தொழிநுட்ப யுகத்தில் கண்டுபிடிப்புகளிலும் புரட்சிகளைக் கண்ட மானுடம் இப்போது வந்து நிற்கும் தகவல் யுகத்தில் யார் முந்திக்கொண்டு தகவலை வழங்குவது எனும் அவசரத்திலும் ஆர்வத்தாலும் குடும்ப அழகையும் அலகையும் கூட இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குடும்ப அலகை பாதுகாக்கும் கடப்பாடு கொண்ட அடுத்த யுகம் நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைப் பாடவிதானத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஐ.சி.டி எனும் பாடத்திட்டத்திற்கு தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் மாதந்தோறும் வெளிவரவுள்ள "கணினி யுகம்" சஞ்சிகை அறிமுக நிகழ்வு பண்டாரவளை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. சஞ்சிகையின் பதிப்பாசிரியர் ஶ்ரீ காந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் பிரதி கல்வி அமைச்சரும ஊவா மாகாண சபை உறுப்பினருமான எம்.சச்சிதானந்தம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர். மேற்படி நிகழ்வில் சிறப்புரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஒவ்வொரு காலகட்டத்திலும் மானுடம் சில புரட்சிகளைக் கண்டே கடந்து வந்திருக்கிறது. அவற்றுள் சிலதை வழமைகள் என்றும், வசதிகள் என்றும், கண்டுபிடிப்பென்றும், கலாசாரம் என்றும் பலவாறாக உள்வாங்கிக்கொண்டுள்ளோம். 

விழாக்கள் தொடங்கும் போது விளக்கேற்றி ஆரம்பிப்பது கலாசாரம் என்கிறோம். இந்த கலாசாரம் எங்கிருந்து வருகிறது. மின்சாரம் இல்லாத யுகத்தில் மக்கள் ஒன்று கூடிய இடங்களில் ஒளியை உருவாக்க விளக்கேற்றிக் கொண்டு கூடிப் பேசி இருப்பார்கள். இப்போது மின்சார ஒளி கிடைத்துவிட்ட நாட்களிலும் நாம் விளக்கேற்றி ஆரம்பிப்பதை விடவில்லை. கூடவே மல்லிகைப் பூச்சரத்தை அந்த குத்து விளக்கில் கட்டித் தொங்கவிட்டு விளக்கேற்றும்போது அந்த அழகிய பூக்கள் பொசுங்கி விழுகிறது. இன்றும் கூட அது நடக்கும் போது எனக்கு மனது வலிக்கவே அதனை ஒதுக்கிவிட்டேன். மங்கல விளக்கேற்றல் என அறிவித்து விட்டு பூக்களை பொசுக்கி விழாக்களை ஆரம்பிக்கும் இந்த கலாசாரம் எங்கிருந்து வந்தது என்று விளங்கவில்லை. ஆனால், எல்லோரும் அதனை செய்து கொண்டிருக்கிறோம்.மின்சாரம் இல்லாத உலகில் நாம் வாழ்ந்திருக்கிறோம். இந்த உரையை நான் ஆற்றும்போது இப்போது மின்சாரம் இல்லை. அதனால் ஒலிவாங்கி இல்லை. இதனால், நீங்கள் அமைதியாக கேட்கிறீர்கள். அதேநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு முன்னர் ஒலிவாங்கியில் ஏனையோர் உரையாற்றும்போது சபை சலசலப்பாகவிருந்தது. 

மின்சார உலகில் நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகள் இல்லாத காலத்திலும் சமூகம் பல சவால்களைக் கடந்து வெற்றிபெற்று இருக்கிறது. மலையக சமூகம் பின்தங்கியே இருக்கிறது என்ற பிரமையை நாம் நமதாக்கிக் கொண்டுள்ளோம். நமக்கு பிரச்சினைகள் பல இருப்பது வேறு. அதனை சவாலாக ஏற்று நாம் கண்ட அடைவுகளை அடையாளம் காண மறுக்கக் கூடாது. பாராளுமன்றில் சபா நாயகர் ஆசனத்தில் அமர்ந்து சபையை வழிநடாத்தி சட்டத்தை நிறைவேற்றும் பணியைக் கூட நான் செய்திருக்கிறேன். அந்த இடத்தில் தற்காலிகமாகவே நான் பணியாற்றியிருக்கிறேன். கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் இந்த குழுவின் உறுப்பினராக பல சமயங்களில் சபைக்கு தலைமை தாங்கி வருகிறார். அந்தப் படங்களை நாங்கள் முகநூலில் பகிர்ந்து கொள்ளும் போது மலையகத்தில் நீங்கள்தான் முதலாவதாக இதனைச் செய்கிறீர்கள் என எழுதுகிறார்கள். 

அது தவறு. பாராளுமன்றில் முதன்மையானவர் அதனையடுத்து பிரதி சபாநாயகர். அவரது தலைமையிலான ஒரு குழு, சபைக்கு தலைமை தாங்கும் தனியான குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கும். அந்தக் குழுவின் பிரதித் தலைவரையே "குழுக்களின் பிரதித்தலைவர்" என்கிறோம். இது உப சபா நாயகர் எனும் பதவிக்கு ஒப்பானது. இந்தப் பதவியில் மலையகத்தில் முதன் முதலாக அமர்ந்தவர் இந்த விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருக்கும் தற்போதைய மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் என்பதுதான் வரலாறு. இந்த உண்மையே வரலாற்றில் இடம்பெறவேண்டும். இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகமாக நாம் ஒடுக்கப்படுவதை மட்டுமே நமது முன்னோக்கிய நகர்வுக்கு தடை எனும் கருத்தையே நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். 

அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், நாம் ஒரு சமூகமாக எவ்வாறெல்லாம் பிளவுண்டு கிடக்கிறோம். அதனால் நாம் காணும் பின்னடைவுகளைப் பேசத் தயாராக இருக்கிறோமா. சக சமூக புறக்கணிப்புகளும், சாதி சமய வேறுபாடுகளும் நமது முன்னேற்றத்திற்கு தடை என்பதை உணர்ந்து அதில் இருந்து விடுதலை அடைந்த பின்னரே நாம் மொழி அடிப்படை சிறுபான்மை சமூகமாக ஒடுக்கப்படுவதற்கு எதிராக போராட முடியும். பதுளையில் இதனை நான் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.

 சாதி அடிப்படையில் பாடசாலை பஸ்கள் செல்வதாக ஒரு முறைப்பாடு பதிவாகியுள்ளது. இது ஆரோக்கியமானதல்ல. நாம் அவதானமாக முன்னகர வேண்டியுள்ளது. பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது எங்களுக்கு வழங்கப்படும் நேரம் இங்கு போல் சுதந்திரமாகதல்ல. உங்கள் நேரம் நிறைவடைந்துவிட்டது என அழுத்திச் சொல்லி அமரவைக்க அந்த தலைமை ஆசனம் அங்கே பொறுப்பேற்றிருக்கும். என்னைப் போன்ற பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினராக 2 முதல் 5 நிமிடங்களே ஒதுக்கப்படும். அந்த சில நிமிடங்களில் பேசுவதென்பது கத்திமேல் நின்று வாக்குக் கூறுவது போன்றது. அந்த நிலையிலையிலேயே நாம் எமது கருத்துக்களை சொல்ல கட்டாயப்படுத்தப்படுகின்றோம். நமது உறுப்பினர்கள் பலர் இந்த கத்திமேல் நிற்கும் பணியில் ஈடுபடுவதில்லை. ஆனால், வெளியே சவால் விடுவார்கள்.

நாங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை என சில ஊடகங்கள் இலகுவாக செய்தி வெளியிட்டுவிடும். இப்போது புத்தகம் வெளியீடு செய்த சில நிமிடங்களுக்கு ஒரு இளைஞரிடம் அதனைக் கொடுத்து படங்கள் எடுக்க சொன்னேன். அவர் மூன்று நிமிடத்துக்குள் ஐந்து தடவை "அண்ணன் கோல்" என என்னிடம் ஓடி வந்து கொடுக்கிறார். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கைத் தொலைபேசியை மூன்று நிமிடம் வைத்திருந்தால் நாம் எந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். இப்போது எந்த செய்தியும் யாருக்கும் புதியதல்ல. தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள் என்று ஆரம்பித்தவர்கள் எல்லாம் இப்போது நீங்களே தெரிவியுங்கள் என செய்தியறிவித்தலை வீதிக்கு விட்டு விட்டார்கள். யார் அனுப்பும் எந்தக் குப்பையும் இப்போது தொலைக்காட்சி செய்தியாகிவிடுகிறது.

 ஆனால் அது உங்களுக்குத்தெரிந்த செய்தியாக இருப்பது தான் இந்த யுகம். இப்போது ஊடகமும பொது மக்களும் செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் அவ்வளவுதான். யார் சொல்லும் செய்தியும் புதிய செய்தி இல்லை. எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில் அது அறிவிக்கப்படுவதற்கான பல்வேறு நுட்பங்களை தகவல் யுகம் நமக்கு கட்டாயமாக கையில் திணித்துள்ளது. இப்போது நாம் நமக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பரபரப்பில் வாழும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளோம். இந்த யுகம் மனித உறவுகளையும் குடும்பத்தையும் நட்புகளையும் பலத்த கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. முகநூலில் ஆயிரம் நண்பர்கள். ஆனால், நட்பின் ஸ்பரிசத்தைத் தரும் ஒரு நட்பும் அருகில் இல்லை. 

கணவனும் மனைவியும் கூட முகநூலிலேயே பிறந்த நாள் வாழ்த்தை பகிர்ந்து கொள்கிறார்கள். நமது அந்தரங்கம் பல நமது கையினாலேயே தகவலாக வெளியே போகிறது. அதற்கான எல்லா வாய்ப்பு வசதிகளையும் இந்த யுகம் நமக்கு வழங்குகிறது. பசுமை யுகத்தில் விவசாயத்திலும், நீல யுகத்தில் கடற்றொழிலிலும், கைத்தொழில் யுகத்தில் பொருளுற்பத்தியிலும், சிவப்பு யுகத்தில் அரசியலிலும், தொழிநுட்ப யுகத்தில் கண்டுபிடிப்புகளிலும் புரட்சிகளைக் கண்ட மானுடம் இப்போது வந்து நிற்கும் தகவல் யுகத்தில் யார் முந்திக்கொண்டு தகவலை வழங்குவது எனும் அவசரத்திலும் ஆர்வத்தாலும் குடும்ப அழகையும் அலகையும் கூட இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குடும்ப அலகை பாதுகாக்கும் கடப்பாடு கொண்ட அடுத்த யுகம் நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் எனவே இப்போதே குடும்ப யுகத்தை எதிர்கொள்ளத் தயாராவோம் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -