அட்டப்பள்ள தமிழ்மக்கள் 23பேர் விளக்கமறியலில்! சம்மாந்துறை நீதிவான் உத்தரவு!


காரைதீவு நிருபர் சகா-
ட்டப்பளம் இந்து மயான விவகாரம் தொடர்பில் சம்மாந்துறைப்பொலிசாரால் அழைக்கப்பட்ட 25 தமிழ்மக்கள் நேற்று(2) மாலை 5.00மணியளவில் சம்மாந்துறை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு அவர்களில் 23ஆண்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிந்தவூர் அட்டப்பளத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட சம்பவத்தின்போது இரு அரச உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதன் எதிரொலியாகவே சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி இப்னுஅசார் அட்டப்பளத்தைச்சேர்ந்த 25 தமிழ்பொதுமக்களை அழைத்திருந்தார்.
அவர்ளில் இருபெண்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 23ஆண்களையும் 14நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று(2) காலை 9மணியளவில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்திற்குச்சென்ற 23பொதுமக்களிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது. பிற்பகல் 4.00மணிவரை மக்கள் பொலிஸ் நிலையத்திலேயே நின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் காரைதீவு பிரதேசசபைக்குத்தெரிவான பிரதிநிதி கி.ஜெயசிறில் ஆகியோரும் நின்றிருந்தனர்.
மாலை 4.30மணியளவில் மக்களை சம்மாந்துறைப் பொலிசார் வாகனத்தில் ஏற்றி சம்மாந்துறை நீதிமன்றிற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு நீதிமன்றில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டபோது விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்..
கடந்த செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர்ப்பிரதேசத்துக்குட்பட்ட அட்டப்பள்ளம் இந்துமயானத்தை ஒரு நபர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்டமையும் அங்கு பதட்டம் நிலவியமையும் தெரிந்ததே.

அந்த ஆர்ப்பாட்டத்தின்போது உதவிபிரதேச செயலாளரும் கிராம சேவையாளரும் தாக்கப்பட்டனர் எனக்கூறி பொலிசில் முறையிடப்பட்டது. பிரஸ்தாப இரு அலுவலர்களும் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி ஆர்ப்பாட்டத்தின்போது தாக்குதலில் ஈடுபட்டனரென்ற சந்தேகத்தின்பேரில் 25பேரின் பெயர்கள் பொலிசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.அதன்பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -