இந்நிலையில் அவை தொடர்பில் அவசரகால சட்ட விதிகளின் பிரகாரம் 20 வருட சிறைத் தண்டனையோ, அல்லது ஆயுள் தண்டனையோ பெற்றுக்கொடுக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர நேற்று இரவு அறிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து, விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் கிஹான் செனவிரத்ன, கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் தினேஷ் பண்டர ஆகியோருடன் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
கடந்த சில நாட்களாக நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற விரும்பத்தகாத நடவடிக்கைகள், அவை சார்ந்த உளவுத் துறை அறிக்கைகளை மையப்படுத்தி அரசாங்கம் இன்று ( நேற்று ) கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்து அவசரகால சட்டத்தை அமுல் செய்துள்ளது.
நேற்று பிற்பகல் 2.45 மணி முதல் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் அமுலுக்கு வந்த நிலையில் இந்த அவசர கால நிலைமைகள் தொடர்பிலான 2 ஆம் மற்றும் 5 ஆம் அத்தியாயங்கள் அமுலுக்கு வருகின்றன.
உயிரிழப்புக்களை ஏற்படுத்தல், காயங்களை ஏற்படுத்தல், சொத்து சேதங்களை ஏற்படுத்தல், பாலியல் ரீதியிலான வன்மத்தில் ஈடுபடல், கொள்ளையடித்தல், இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை தோற்றுவித்தல், இன முறுகலை தூண்டும் வண்ணம் கட்டுரைகள், எழுத்துக்களை சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் பதிவு செய்தல், அவற்றை பகிர்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அவை தொடர்பில் அவசரகால சட்ட விதிகளின் பிரகாரம் 20 வருட சிறைத் தண்டனையோ, அல்லது ஆயுள் தண்டனையோ பெற்றுக்கொடுக்க முடியும்.
இதற்கு மேலதிகமாக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோரையும், அதற்கு உதவி ஒத்தாசை வழங்குவோர், சதி செய்வோர் தொடர்பில் பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையின் அனைத்து வீரர்களுக்கும் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் ஒருவரை இச்சட்டத்தின் கீழ் கைது செய்தால், 24 மணி நேரத்தில் சந்தேக நபர்களை அவர்கள் பொலி
ஸாரிடம் ஒப்படைப்பதுடன், பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவர். குறித்த சந்தேக நபர்கள் மீது நீண்ட விசாரணை தேவைப்படின், பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சந்தேகநபரை 14 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் உத்தரவில் கையெழுத்திடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அவசரகால நிலைமைகளின் போது சட்டத்தை நிலை நாட்டுகையில், குற்றம் புரிந்தோரின் தராதரம், மதம், இனம், அரசியல் கொள்கை, கட்சி பேதங்களை பார்க்க வேண்டாம் என ஜனாதிபதி பாதுகாப்பு தரப்புக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். இந்த அவசர கால நிலைமையானது 7 நாட்களுக்கு செல்லுபடியாகும் நிலையில் அதன்பின்னர் நிலைமைகளை அவதானித்து அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் அவசரகால நிலைமைகளின் போது, குற்றச் செயல் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அது தொடர்பிலான தகவல்களை பொலிஸாருக்கோ பாதுகாப்பு தரப்புக்கோ வழங்குவது கட்டாயமான பொறுப்பாக்கப்பட்டுள்ளது. அதனை தட்டிக்கழிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்நிலையில் தற்போது, கண்டி தெல்தெனிய, திகன பகுதிகளில் பொலிஸார் அமைதியை ஏற்படுத்த பூரண பாதுகாப்பை வழங்கியுள்ள நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் எதிராக பொதுச் சொத்து, சர்வதேச சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான இணக்கப் பாட்டு சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. சமூகங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் எவராக இருப்பினும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.