பண்டாரவளையில் இருந்து எபரவ கிராமத்தை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பண்டாரவளை தியத்தலாவ பிரதான வீதியில் கஹகொல்ல பகுதியில் 21.02.2018 அன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் திடீரென தீப்பற்றிக் கொண்டதில் 19 பேர் படுங்காயங்களுடன் தியத்தலாவ மற்றும் பண்டாரவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களுள், 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 பொது மக்கள் உள்ளிட்ட 19 பேர் அடங்குகின்றனர். இதில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த பஸ் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த பஸ்ஸில் நடுப்பகுதியில் ஏற்பட்ட புகையுடன் வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இராணுவ வீரர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பண்டாரவளைக்கு செல்லும் பஸ்ஸில் வந்திறங்கி பண்டாரவளையிலிருந்து தியத்தலாவிற்கு மற்றைய தனியார் பஸ்ஸில் பயணித்த போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
இச்சம்பவம் குறித்து, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை பொலிஸார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.