கொழும்பு இந்து இளைஞர் மன்றம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அவசர வேண்டுகோள்
நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான திரு. மனோ கணேசன் அவர்களுக்கு தமிழ் மக்களுக்குச் சேவை செய்யக் கூடியதான சிறப்பானதொரு அமைச்சரவை அமைச்சர் பதவியை கூட்டு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிக் கௌரவிக்க வேண்டும் என கொழும்பு இந்து இளைஞர் மன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இந்த நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெற மிகவும் முக்கியமான பிரதான காரணகர்த்தாவாக விளங்கியவர். அவரது பாரிய பங்களிப்புக் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கம் தோற்றம் பெற்றது என்பதனை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என முழு நாட்டு மக்களுமே நன்கறிவர். ஆனால் அவரது நல்லெண்ணத்திற்கும், நாட்டின் அமைதிக்காக அவர் முன்னெடுத்த பாரிய முயற்சிக்கும் கடந்த இரண்டு வருடங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியானது எவ்வகையிலும் பொருத்தமற்றது ஒன்றாகவே நாம் கருதுகின்றோம் என மன்றத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பிள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு எதிராக நின்று செயற்பட்டதுடன், தமிழ் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், திரைமறைவிலும் எதிராகச் செயற்பட்டவர்களுக்கும் தமது சமூகங்களை உயர்நிலைப்படுத்தவும், தமது சமூகத்தவர்களுக்கு விரும்பியவாறு வேலை வாய்ப்புக்களை வழங்கவும், தமது சமூக மக்கள் வாழும் பிரதேசங்களை விரும்பியவாறு அபிவிருத்தி செய்யவும் தேவையான வளங்களையும், வசதிகளையும் கொண்ட அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. இது மிகவும் வேதனை தந்த விடயமாக அமைந்திருந்தது. இதனை இனி மாற்றியமைக்க வேண்டும். அது தமிழ் மக்களது பொறுப்பும், கடமையுமாகும்.
கொழும்பு வாழ் தமிழ் மக்களை மட்டுமல்ல வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களையும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நன்கறிந்து அதற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாது செயற்பட்டு வந்த திரு. மனோ கணேசனின் செயற்பாடுகள் ஒரு சிறு குறுகிய வட்டத்தினுள் திட்டமிட்டு முடக்கப்பட்டிருந்ததாகவே கொழும்பு இந்து இளைஞர் மன்றம் கருதுகின்றது. இதனை இனிமேலும் பொறுமையுடன் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதற்கு முற்றுப் புள்ளி வைத்தே ஆக வேண்டும்.
தகுதியில்லாதவர்களுக்கும், தமிழர்களை அடக்கி அடிமைகளாக வைத்திருக்க முயல்பவர்களுக்கும் தமிழர் பிரதேசங்களில் அதிகூடிய அதிகாரங்களை வழங்கி தமிழர்களை அடக்க முனைவதை இனியும் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தாம் ஆட்சியமைக்கவும், தமது எதிரிகளை துவம்சம் செய்து அதிகாரங்களைக் கைப்பற்றவும் திரு. மனோ கணேசனையும் அவருடன் சார்ந்தவர்களையும் கறிவேப்பிலை போன்று தேவைக்குப் பயன்படுத்திவிட்டு அமைச்சுக்களின் அதிகாரப் பகிர்வின்போது கண்டு கொள்ளாமலிருக்கும் பெரும்பான்மையின சிந்தனைக்கு இனியும் இடமளிக்க முடியாது.
நல்லாட்சி அரசாங்கம் அமைந்து தமிழர் நிம்மதியாக வாழ்ந்தால் அது மட்டுமே தனக்குப் போதுமானது என நினைத்து தனக்கு கிடைக்கவிருந்த பல உயர் பதவிகளைப் பலர் திட்டமிட்டுத் தடுத்தபோதிலும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவி மூலமாக தனது பிரத்தியேகமான தனக்கே உரிய பாணியில் பலவற்றைச் செய்துவரும் திரு. மனோ கணேசனின் உயரிய பண்புக்கு முன்னால் அவருக்கு நல்லது நடக்கக்கூடாது என நினைத்துச் செயற்படும் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டும்.
எனவே ஆட்டம் கண்டு மீண்டும் ஆட்டம் காணாது தொடரவுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் திரு. மனோ கணேசனுக்கு உரிய அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் கொழும்பு இந்து இளைஞர் மன்றம் உறுதியாக உள்ளது. அவ்வாறு இடம்பெறவில்லையாயின் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுவும் கொழும்பு இந்து இளைஞர் மன்றத்திற்கு நன்கு தெரியும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மக்களது ஆணையை தேர்தல் மூலமாக நேரடியாகப் பெறாது தேசியப் பட்டியல் மூலமாக அமைச்சுப் பதவிகளைப் பெற்று அதனை வெறுமனே கௌரவப் பதவிகளாக நினைத்து எவ்விதமான மக்கள் சேவையும் புரியாது பதவிகளை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் சிலர் மத்தியில் மக்களது பெரும் ஆதரவைத் தாம் பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாது அரசாங்கத்திற்கும் அதனைச் சார்பாகப் பயன்படுத்தி தமிழரின் பெருந்தன்மையை அவர்களுக்குப் புரிய வைத்துவரும் திரு. மனோ கணேசன் போன்ற உண்மையான தகுதியுடைவர்கள் அதற்குரிய கௌரவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் கோரிக்கையாகும்.