கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் தெரிவிப்பு
அம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கிண்ணியா நகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள இந்த அரசு சிறுபான்மை மக்களின் உரிமை – பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நல்லாட்சி அரசிலும் இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து செல்வதானது முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம் தலைமைகள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுசேர்ந்து அரசுக்கு கடுமையைன அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
அம்பாறையில் நடந்துள்ள சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவமாகும். வெளியூர்களில் இருந்து வந்த கும்பலொன்றினாலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்போது பொலிஸார் மந்த கதியில் செயற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி நீதியான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், குற்றவாளிகளுக்கு எதிரான விரைவாக சட்ட நடவடிக்கையை உரிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்து அங்கு முஸ்லிம்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கவும் இதனை வண்மையாக தான் கண்டிப்பதாகவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.