க.கிஷாந்தன்-
அமைச்சர் திகாம்பரம் அவர்களின் சேவையினை அங்கிகரித்து இந்த நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களுக்கு சேவையினைப் பெற்றுக் கொடுப்பதற்காக வரவு செலவு திட்டத்தில் பாரிய அளவில் நிதியினை ஒதுக்கி வருகிறது.
கடந்த காலத்தில் இருந்த தலைவர்கள் ஒழுங்காக சேவை செய்யாததனால் அந்த நிதி மீண்டும் திறைசேரிக்கு சென்றுள்ளது. இன்று வரவு செலவு திட்டத்தில் மலையக மக்கள் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்காக 2000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
அதுமட்டுமன்றி வீதியை அபிவிருத்தி செய்வதற்கு மின்சாரத்தினை பெற்றுக்கொடுப்பதற்கும் குடிநீர்ப் பெற்றுக்கொடுப்பதற்கும் வருடா வருடம் வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது.
இப்போது மாகாண சபை எல்லை நிர்ணயம் செய்து வருகின்றது. தற்போதுள்ள 11 உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையாத வகையில் எல்லையை தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்கும். கடந்த காலங்களில் எல்லை நிர்ணயத்தின் போது ஏற்பட்ட பிழைகளைக்கூட அவ்வணி நிவர்த்தி செய்யுமென மத்திய மாகாண சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான சோ.ஸ்ரீதறன் தெரிவித்தார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் இரண்டு கோடியே 80 இலட்சம் ரூபா செலவில் 7 பேர்ச்சர்ஸ் காணியில் கொட்டகலை யூனிபீல்ட் தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள 28 தனிவீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஸ்ரீதரன் தலைமையில் 23.11.2017 அன்று மாலை இடம்பெற்றது. அடிக்கல்லினை நாட்டிவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங் பொன்னையா அவர்களும் உரையாற்றியதுடன் இந்நிகழ்வுக்கு முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் நகுலேஸ்வரன், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


