மர்ஹூம் மன்சூரை புகல்வதன்மூலம் முஸ்லிம் காங்கிரசை இகழ முற்படுகின்றார்களா..?

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் கல்முனைக்கு ஏராளமான அபிவிருத்திகளை செய்தார். ஆனால் அவர் போன்று வேறு யாரும் கல்முனைக்கு எதுவும் செய்யவில்லை என்பது போல கடந்த இரண்டு நாட்களாக ஆழமாக சிந்திக்காது முகநூல் மூலமாக கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். மர்ஹூம் மன்சூர் அவர்கள் கல்முனை பிரதேசத்துக்கு ஏராளமான அபிவிருத்திகளை செய்தார் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. அவரை அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டும். 

இந்த கருத்துக்கள் மூலம் அதே கல்முனையை சேர்ந்தவரும், இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு முகவரி வழங்கியவருமான மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று கூற எத்தனிக்கின்றார்களா ? மர்ஹூம் மன்சூர் அவர்கள் உயிரோடு இருக்கின்றபோது யாரும் அவரை வாழ்த்தவில்லை. கண்டுகொள்ளவுமில்லை. இப்போது அவரை புகழ்பாடுவது, உண்மையில் அவரை புகழ்வதற்காக அல்ல. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் காரர்களை இகழ்வதற்காக என்பதை புரிந்துகொள்ள கூடியதாக உள்ளது. 

அவைகள் ஒருபுறமிருக்க, நாங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது ஏ.ஆர். மன்சூர் அவர்கள் தொகுதிவாரி தேர்தல் முறை மூலம் பாராளுமன்றம் சென்றார்கள். அதனால் அவருக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் அனைத்தையும் அவரது கல்முனை தொகுதிக்கு மட்டுமே செலவு செய்தார். இந்த மாவட்டத்தின் சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளுக்கு அபிவிருத்தி செய்வதற்கு வேறு உறுப்பினர்கள் இருந்தார்கள். 

1989 ஆம் ஆண்டு முதல் முதலாக விகிதாசாரமுறையில் தேர்தல் நடைபெற்றது. அன்றைய ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவினால் தேசிய பட்டியல்மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும், முழு அமைச்சர் பதவியும் மர்ஹூம் மன்சூர் அவர்களுக்கு வழங்கப்பட்டு ஏராளமான நிதிகள் ஒதுக்கப்பட்டது. 

அமைச்சர் மன்சூர் அவர்களுக்கு அன்றைய ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியும், அபிவிருத்திக்காக ஏராளமான நிதிகளையும் வழங்கியது அவர்மீது உள்ள பாசத்தினாலோ, அல்லது கல்முனை மக்கள் மீது கொண்ட அன்பினாலோ அல்ல. மாறாக அபிவிருத்தியை காட்டி முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சியை தடுத்து அஸ்ரப்பை செல்லாக்காசாக ஆக்குவதற்காகத்தான் என்பது எத்தனை பேருக்கு புரியப்போகின்றது..? மர்ஹூம் மன்சூர் அவர்கள் தனது நிதியினை தனது தொகுதியான கல்முனை தொகுதிக்கு மட்டு செலவு செய்தார். ஆனால் முஸ்லிம் காங்கிரசின் நிலை அப்படியல்ல. மாவட்டம் முழுக்க அல்லது நாடு முழுக்க செலவு செய்யவேண்டிய நிலை. இதனால் ஒவ்வொரு ஊர்களையும் திருப்திபடுத்த வேண்டும். 

எனவேதான் மர்ஹூம் மன்சூர் அவர்கள் அபிவிருத்தி செய்தார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று கூறுவதனைவிட, அன்றைய சூழ்நிலையும் இன்றைய சூழ்நிலையும் என்ன என்று பகுத்தறிவைகொண்டு சிந்திப்பதுதான் யதார்த்தமாகும். 
முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -