மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள பிணைமுறி மோசடியிலிருந்து அரசாங்கம் தப்பித்துக்கொள்வதற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும் பதவியிலிருந்து விலக்க முற்படலாம். எனினும் அதற்கு மாத்திரம் நாம்இடமளிக்கப்போவதில்லை. எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில்நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது.எனினும் பொலிஸ்மா அதிபர் தற்போது சட்டத்தை அரசாங்கத்தின் தேவைக்கு அமைவாக மாற்றுகிறார்.வடக்கில் ஒரு விதமாகவும்தெற்கில் மற்றுமொரு விதமாகவும் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
மேலும் அரசாங்கம் வகைதொகையின்றி தேசிய வளங்கைள வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் சனிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. இது மிகவும் பாரதூரமானதாகும். ஏனெனில் அம்பாந்தோட்டை துறைமுகமானது நாட்டின்பொருளாதாரத்தில் மிக முக்கிய இடம் வகிக்கவுள்ளது.
துறைமுகங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக அர்ஜுன ரணதுங்க பதவி வகித்தபோது அவர் அவ்வொப்பந்தத்திற்கு உடன்படவில்லை.எனவே அவரை அவ்வமைச்சிலிருந்து நீக்கிவிட்டு தற்போது தேசியப் பட்டியல் மூலம்தெரிவான பாராளுமன்ற உறுப்பினரூடாக குறித்த உடன்படிக்கையை செய்துகொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவ்வுடன்படிக்கைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரைவயின் அனுமதி பெறப்பட்டதுடன் வெள்ளிக்கிழமை (இன்று) பாராளுமன்றில் விவாதம் நடத்தி எதிர்வரும் சனிக்கிழமை கைச்சாத்திடுவதற்கும் நடவடிக்கைஎடுத்துள்ளனர். ஏன் இவ்வாறு அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்? ஆகவே அவ்வுடன்படிக்கைக்கு எதிராக நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும்.
மேலும் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் இடம்பெற்றுள்ள மோசடிக்காக அமைச்சர் ரவி கருணாநாயக்க மாத்திரமல்லாது நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. எனவே அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும் பதிவியிருந்து விலக்கி அரசாங்கம் குறித்த குற்றச்சாட்டிலிருந்து விலகுவதற்கு எத்தணிக்கலாம். எனினும் அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.
ஆகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராகநம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவருவதற்கு கூட்டு எதிர்கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும்தெரிவித்தார்.