ஹம்ஸா கலீல்-
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி டீன் வீதி அபிவிருத்தி தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறன.
அதன் முதற்கட்டமாக வடிகான் வேலைகளுக்காக 30 இலட்சம் ரூபாய் நிதி புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மேலதிகமாக 50 இலட்சம் ரூபாய் நிதி அரசநிதியில் இருந்து வடிகான் வேலைகளுக்கென இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் அபிவிருத்தி திட்டத்தில் டீன் வீதியின் முன்பகுதி 06 மீற்றர் அகலமுடையதாகவும் பின்பகுதி 08 மீற்றர் அகலமுடையதாகவும் அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றது. இதற்கான அனுமதி காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வீதியின் இரு மருங்கிலும் வீதி அபிவிருத்திக்கு தடையாக உள்ள கட்டடங்களை அகற்றும் வேலைத்திட்டமும் வடிகான் அமைப்பதற்கான வேலைகளும் பிரதேச செயலகத்தினால் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.
மேலும் டீன் வீதியை முழுமையாக காபட் இட்டு செப்பணிடுவதற்கான சகல நிதி ஒதுக்கீடுகளும் ஐ றோட் (I Road) திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசினால் மேற்கொள்ளப்படுகிற ஐ றோட் (I Road) திட்டத்திற்கான வேலைகள் ஆகஸ்ட் மாதமளவில் டென்டருக்கான அழைப்பு விடுக்கப்பட்டு ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.
ஆகவே அதற்கு முன்பாக வடிகான் வேலைகளை முடிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வடிகான் வேலைகளுக்கான முழுமையான நிதி ஒதுக்கீடுகள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் காத்தான்குடி கடற்கரை வீதி (மெரைன் டிரைவ்) அபிவிருத்தி திட்டத்தில், ஒரு பகுதிக்கான வீதி அபிவிருத்தி முழுமையாக செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் மற்றைய பகுதி உடனடியாக முழுமையாக காபட் இடப்பட்டு செப்பனிடுவதற்கான சகல வேலைகளும் அதற்கான நிதி ஒதுக்கீடும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இவ் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இந்த ஆண்டுக்குள் முடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

