எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினத்தன்று ரூபவாஹினி நேத்ரா அலைவரிசையில் மாலை 3 மணி முதல் 6 மணிவரை பெருநாள் விசேட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். முஸ்லிம் சேவை பணிப்பாளர் அல்ஹாஜ் எம். கே.எம். யூனுஸ் அவர்களின் மேற்பார்வையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மபாஹிர் மௌலானா, ஹஸாரியா பேகம், முபாரக் மொஹிதீன், சீ .பி. எம். ஷியாம் ஆகியோர் வழங்குகின்றனர். எடிட்டிங்கை றிவாஸ் முஹம்மத்தும் கிராபிக்ஸ் எனிமேஷன் பணியினை ஹஸ்மத் ஸஜீயும் மேற்கொண்டுள்ளார்கள்.
சட்டத்தரணிகளான மர்சூம் மௌலானா மற்றும் அஷ்ஷெய்க் இஸட்.ஏ. அஷ்ரப் (நளீமி) ஆகியோர் சிறப்பதிதிகளாகக் கலந்து கொண்டு தேசிய சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஒரு தொடர் கலந்துரையாடலை வழங்குகிறார்கள்.
இந் நிகழ்ச்சியில் தமிழ், மலையாள சிறுவர் பாடல்களும், சிங்கள மொழியில் நோன்பு பற்றிய விவரணமும் இடம் பெறுகிறது. இறக்காமம் ஏ.எல்.ஜபீர் எழுத திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை மபாஹிர் மௌலானா ஏற்றுள்ள "ஆனந்தத்தில் ஓர் அனல் " எனும் சமூக நாடகம் ஒளிபரப்பாகும்.
ஹஸாரியா பேகம் தயாரித்து வழங்கும் இசைத்தென்றல் இஸ்லாமிய கீத நிகழ்ச்சி மூத்த இசையமைப்பாளர் கே.எம். சவாஹிரின் இசையமைப்பில் இடம்பெறும். என்.நஜ்முல் ஹுசைன், ராஹிலா ஹலாம், காத்தான்குடி மதியன்பன், எம்.சி.முஹம்மத் அலி, கம்மல்துறை இக்பால் ஆகியோரின் பாடல் வரிகளுக்கு பிரபல பாடகர் டோனி ஹஸன், உபைதுல்லாஹ் மஹ்தூம், ஷப்னாஸ் சமுருதீன், சிம்லா மாஹிர், எம். சி.முஹம்மத் அலி ஆகியோர் குரல் கொடுக்கின்றனர். இந்த நிகழ்ச்சியினை ஒலுவில் ஜே. வஹாப்தீன் தொகுத்து வழங்குகிறார்.
முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் நோன்புப் பெருநாள் விசேட கவியரங்கம் இடம்பெறும். மன்னார் விடத்தல்தீவு சுஐப் ஏ.காசிம், பாணந்துறை கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், காத்தான்குடி முகைதீன் சாலி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.