ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகளில் ஒருவரும், இக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி நுஆ கட்சியின் தலைவர் ஆகின்றார்.
அஷ்ரப்பால் நாட்டின் மூவின மக்களையும் இணைத்த அரசியலை செய்வதற்காக பிற்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நுஆ கட்சி தற்போது அசாத் சாலி வசம் உள்ளது.
இக்கட்சி சம்பந்தப்பட்ட பதிவு வேலைகளை கிரமமாக செய்வதற்கு முக்கிய ஆவணங்கள் சிலவற்றை பெற ஹசன் அலியை அணுகி இருக்கின்றார் அசாத் சாலி.
அப்போது இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் சமுதாயத்தின் நன்மையை உத்தேசித்து இக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும் என்று அசாத் சாலி கோரி இருக்கின்றார்.
அஷ்ரப்பின் பாதையில் இருந்து ஒரு போதும் விலக மாட்டார் என்று பகிரங்கமாக சூளுரைத்து வருகின்ற ஹசன் அலியும் இதற்கு இணக்கம் தெரிவித்து உள்ளார்.
ஹசன் அலியின் தலையீட்டை தொடர்ந்து பதிவு வேலைகள் தேர்தல் திணைக்களத்தில் இலகுவாகி உள்ளன.
நுஆ ஒரு கூட்டு முன்னணி போல செயற்படும் என்றும் ரவூப் ஹக்கீமின் தலைமைக்கு எதிரான முஸ்லிம் தலைமைகளுக்கு ஹசன் அலி தலைமையிலான நுஆவில் பங்காளி கட்சிகளாக இணைவதில் பிரச்சினை இராது என்றும் தெரிய வருகின்றது.
அத்துடன் அஷ்ரப் கனவு கண்டபடி அனைத்து இனத்தவர்களையும் இணைத்த அரசியலை இது முனைப்புடன் முன்னெடுக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறான ஒரு நகர்வை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.