ஏறாவூர் நகரத்தை ஊடறுக்கும் மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை சரியாக ஒரு அடி உயர்த்தப்படும்

ற்பொழுது நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தியின் ஒரு கசட்டமாக ஏறாவூர் நகரத்தை ஊடறுக்கும் மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை சரியாக ஒரு அடி உயர்த்தப்படும் என்று மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைப் பொறியியலாளர் ரீ. பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரத்தை ஊடறுத்துச் செல்லும் வீதி, நகர விரிவாக்கல் அபிவிருத்தித் திட்டம் பற்றி அவர் புதன்கிழமை விவரம் தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் தெரிவித்த அவர்,

ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு-மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் ஒட்டு மொத்தமான அபிவிருத்திப் பணிகள் ஜுன் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஏறாவூர் ஒரு வர்த்தக மைய நகராக இருப்பதால், சித்திரைப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாள் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு ஜுன் மாதத்திற்கு நெடுஞ்சாலை அபிவிருத்திக்காக கட்டிடங்களைத் தகர்க்கும் செயற்பாடுகள் கால நீடிப்புச் செய்யப்படம்டுள்ளன.

ஆயினும், பலர் நேரகாலத்துடனேயே தற்போதிருந்து தமது கடைகளையும் வீடுகளையும் பின்னோக்கி நிருமாணிக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளார்கள். இது வரவேற்கத் தக்கது.

இதில் முக்கியமான விடயம் ஏறாவூர் நகரை ஊடறுக்கும் கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை தற்போதிருக்கும் அளவிலிருந்து சரியாக ஒரு அடி உயர்த்தப்படவுள்ளது.

எனவே, இதனைக் கவனத்திற்கொண்டு கடைகளையும் வீடுகளையும் நிருமாணிக்குமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது’ என்றார்.

தற்பொழுது நாடு முழுவதிலும் நகர அபிவிருத்தி இடம்பெறுகின்றது. அதிலே முக்கியமாக வீதிப் பயணப் பாதுகாப்பு கவனத்திற் கொள்ளப்படுவதால் நகர நெடுஞ்சாலைகளோடு ஒட்டிய நகரங்கள் அகலமாக்கப்படுகின்றன.

சமகாலத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களினால் உயிரிழப்புக்கள், அங்கவீனங்கள், பொருளாதார நஷ்டங்கள் என்பன ஏற்படுகின்றன.

எனவே இந்த இழப்புக்களையும் அழிவுகளையும் முடிந்தளவு குறைத்துக் கொள்வதற்காக நாட்டு மக்களின் நன்மை கருதியே நெடுங்சாலைகள், பெருந்தெருக்கள். வீதிகள் என்பன அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

சன அடர்த்தியான, வீதிப் போக்குவரத்திற்கு சௌகரியமில்லாத, பாதுகாப்பற்ற வீதிகளை அகலமாக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

மனித உயிர்களை உறுஞ்சிக்குடிக்கும் இடங்களாக குறுகலான நகரங்கள் இருந்து வருகின்றன.

இதனை அனைவரும் அக்கறையுடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

குறுகலான நகரத் தெருக்களை சனத்தொகை அடர்த்தி கூடக் கூட எப்போதும் அகற்றி அகலமாக்க வேண்டிவரும் என்பதை நாம் கவனத்தில் கொண்டு கட்டிட நிர்மாணங்களை மேற்கொள்ள வேண்டும்.

தற்போதிருக்கும் திட்டமிடாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ள நகரங்களையும் நெடுஞ்சாலைகளையும் அடுத்த சந்ததிக்கு பாதுகாப்பற்ற உயிரச்சுறுத்தலுடன் பயணிக்கக் கூடிய நகரங்களாக நாம் விட்டுச் செல்லக் கூடாது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலைகளை அகலமாக்கி நகரங்களை பாதுகாப்பானதாக நிர்மாணிக்கும் வாய்ப்புக்களை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், குடியிருப்பாளர்கள், மற்றும் காணிச் சொந்தக் காரர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் என எல்லோரும் ஏகோபித்த ஆதரவை வழங்க வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -