அஹதிய்யா பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு..!

சலீம் றமீஸ்-
ரசாங்கம் அஹதிய்யா பாடசாலைகளின் கல்வியினை மாணவர்களுக்கு கட்டாயப்படுத்துகின்ற போது அதன் மூலமாக மாணவர்கள் சிறந்த பலனை அடைவார்கள் என அக்கரைப்பற்று வலய அஹதிய்யா பாடசாலைகளின் தலைவரும், அந்-நுஹா அஹதிய்யா பாடசலையின் அதிபருமான மௌலவி எம்.எம்.முபீஸ்(மன்பயீ)தெரிவித்தார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று வலயத்திலுள்ள இஸ்லாமிய சமய (அஹதிய்யா) பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் வைபவம் அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே தலைவர் முபீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் அவர் கூறுகையில், அஹதிய்யா பாடசாலையானது அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மாணவர்களின் சமயம் மற்றும் ஏனைய கல்வி வளர்ச்சிக்காக பணி செய்து வருகின்றது. இப் பாடசாலையானது வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாத்திரமே நடாத்தப்பட்டு வருகின்றது. இத்தினத்தில் காலை 08.00 மணியிலிருந்து 12.00 மணிவரை சமயம் தொடர்பான கல்வியினை வழங்கி வருகின்றது. உண்மையிலே குறிப்பிட்ட இந்த நேரம் போதமல் உள்ளது. அதுமட்டுமல்ல இத்தினத்தில் மாணவர்கள் பகுதிநேர வகுப்புக்கு செல்வதனால் வருகை வீதமும் குறைவாக காணப்படுகின்றது. சில பெற்றோர்கள் அஹதிய்யா பாடசாலைக்கு முக்கியத்துவம் வழங்குவதும் குறைவாகவே உள்ளது. இது ஒரு கவலையான விடயமாகும்.

இவ்வாறு இருக்கையில் அஹதிய்யா பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரிய, ஆசிரியர்கள் சமூக சேவை அடிப்படையில் பல தியாகங்களுக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் சில பெற்றோர்களும், மாணவர்களும் ஆர்வமில்லாமல் இருப்பது வேதனையாவுள்ளது. ஏற்கனவே அரசாங்கம் இவ் ஆசிரியர்களுக்கு வருடாந்தம் சீருடையும், வருடாந்த புத்தக கொள்வனவுக்காக இரண்டாயிரம் ரூபாவும் வழங்கி வந்தது. இந்த வருடம் சீருடை மாத்திரமே வழங்கியுள்ளது.

இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் எத்திட்டத்தினை அமுல்படுத்துவதாயினும் நிதி பிரதானமாகவுள்ளது. திட்டம் மேற்கொளவதற்கு முன்னரே நிதியினையே எதிர்பார்க்கும் இக்கால கட்டத்தில் தியாக மனப்பாங்குடன் எமது பிள்ளைகளின் சமய கல்விக்காக ஞாயிறு தினத்தினையும் தியாகம் செய்து பணி செய்து வருகின்ற உயர்கல்வியினை முடித்த ஆசிரிய, ஆசிரியர்களுக்கு நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதுடன் இவர்களுடைய வாழ்க்கையில் அல்லாஹ் பரக்கத் செய்ய வேண்டும். இவ்வாறு எமது பிள்ளைகளுக்காக தியாகம் செய்து வருகின்ற ஆசிரியர்களுக்கும், நிருவாகத்திற்கும் பெற்றோர்கள் ஆதரவு வழங்க வேண்டும். அஹதிய்யா பாடசாலையின் செயல்பாடுகளுக்கு சில தனவந்தர்கள் அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அவ்வாறனவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

எனவே, சமூக சேவை அடிப்படையில் பணியாற்றி வரும் அஹதிய்யா பாடசாலைகளின் ஆசிரியர்களின் விடயத்தில் அரசு கவனமெடுத்து அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும் ஏனைய வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் அஹதிய்யா பாடசாலையின் சமய கல்வி செயற்பாட்டினை மாணவர்களுக்கு கட்டாயப்படுத்தி அதற்கான சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் மிக முக்கியமாக அஹதிய்யா பாடசலை நிருவாகத்திற்கும், அரச பாடசலைகளின் அதிபர்களுக்குமிடையிலான சமய கல்வி தொடர்பான நட்புறவுகளை பேணுவதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும் எனவும் மௌலவி முபிஸ் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அக்கரைப்பற்று வலய அஹதிய்யா பாடசாலைகளின் பொதுச் செயலாளரும், தர்த்திய்யா பாடசாலையின் உபதலைவரும், அந்-நுஹா அஹதிய்யா பாடசாலையின் உப செயலாளருமான எஸ்.றிபாய்தீன் , அக்கரைப்பற்று அந்-நுஹா அஹதிய்யா பாடசலையின் தலைவர் எஸ்.எல்.ஏ. அப்துல் சுக்கூர் மற்றும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் பிரதேச அஹதிய்யா பாடசாலைகளின் ஆசிரிய, ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -