பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஐந்து பேர் சுயாதீனமாக செயற்படலாம் என்றாலும் பாராளுமன்றத்தில் தனிக்கட்சியாக அங்கீகரிக்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டம் மற்றும் பாராளுமன்ற நியதி சட்டங்கள் அடிப்படையில் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினரை தனிக் கட்சியாக அங்கீகரிக்க முடியாது எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எனவும் குறிப்பிட்டார்.
மேலும்:
தொடர்ச்சியாக பாராளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமையால் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை நிலையியற் கட்டளை சட்டத்தின் 74/1 கீழ் பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு சற்றுமுன்னர் பிரப்பித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் முதலில் ஏற்பட்ட அமளிதுமளியை தொடர்ந்து சபை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பித்த போது விமல் வீரவன்ச மற்றும் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட கூட்டு எதிரணியினர் ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்து தமது பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்குமாறு கோரி கோஷமெழுப்பியதால் சபையில் பதற்றநிலை ஏற்பட்டது. இதனால் சபையை மீண்டும் சபாநாயகர் 10 நிமிடத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.