2016ஆம் ஆண்டு டிசெம்பெர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மார்ச் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அன்றைய தினத்தில் பரீட்சார்த்திகள் இணையத்தின் மூலம் தங்களது பெறுபேறுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2016-டிசெம்பெர்) 5669 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசெம்பெர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி டிசெம்பெர் 21ஆம் திகதி முடிவடையவுள்ளது.
இவ்வாண்டின் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகி செப்ரெம்பெர் 02ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளது.
இந்தப் பரீட்சையின் முடிவுகள் டிசெம்பெர் மாதம் 27ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இவ்வாண்டுக்கான ஐந்தாந்தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்தப் பரீட்சை முடிவுகள் ஒக்டோபெர் 5ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.