சட்டவிரோத எரிசாராய உற்பத்திச்சாலை நிருமாணத்திற்கெதிராக கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

ட்டக்களப்பு மாவட்டம் கல்குடாவெம்பு எனும் பிரதேசத்தில் நிறுவுவதற்கு முயற்சிக்கப்படும் சர்ச்சைக்குரிய எரிசாராய உற்பத்தி நிலையத்திற்கு எதிரான முறைப்பாடொன்றை சனிக்கிழமை மாலை 25.03.2017 கல்குடா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளதாக கோறளைப்பற்றுப் பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம். ஷிஹாப்தீன் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,

டபிள்யூ.எம். மென்டிஸ் மதுசார நிறுவனம் கும்புறுமூலை கிராம சேவகர் பிரிவில் உள்ள கல்குடாவெம்பு பகுதியில் விலைக்கு வாங்கிய 25 ஏக்கர் காணியில் எதனோல் மதுசார மூலப் பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதி கேட்டு திட்ட முன்மொழிவொன்றை கடந்த வருடம் (2016) மார்ச் மாதத்தில் கோறளைப்பற்று பிரதேச சபையிடம் சமர்ப்பித்திருந்தது.

உத்தேச எரிசாராய உற்பத்தி நிலையத்தை எமது பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட எந்த இடத்திலும் அமைப்பதற்கு பிரதேச சபை ஒருபோதும் அனுமதியை வழங்கியிருக்கவில்லை.

ஆயினும், பிரதேச சபை அனுமதி வழங்காதது குறித்து அந்த நிறுவனம் நினைவூட்டல் கடிதமொன்றை கடந்த வருடம் (2016) ஏப்ரல் மாதம் பிரதேச சபைக்கு அனுப்பியிருந்தது.

அதேவேளை, கடந்த வருடம் 2016.09.22 அன்று கிழக்கு மாகாண சபையும் உத்தேச எரிசாராய உற்பத்தி நிலைய நிருமாணப் பணிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

அந்தத் தீர்மானத்தையும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த மதுசார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அனுமதியளிப்பதில்லை என்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையும் மென்டிஸ் நிறுவனத்திற்கு அனுப்பியிருந்தோம்.

ஆயினும், தமது நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டமை பற்றி செயலாளராகிய எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் கோரிக்கைக் கடிதத்தை அந்த நிறுவனம் தமது சட்டத்தரணிக்கூடாக அனுப்பியிருந்தது.

எவ்வாறாயினும், பிரதேச சபைச் செயலாளராகிய எனக்கெதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாதென்றும், கட்டிட நிருமாண வேலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி பிரதேச சபையின் சட்டத்தரணிக் கூடாக மென்டிஸ் கம்பெனிக்கு அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், சர்ச்சைக்குரிய எரிசாராய உற்பத்திச்சாலை நிருமாணப் பணிகள் எதிர்காலத்தில் எந்தவொரு சூழ்நிலையிலும் இடம்பெறாவண்ணம் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெறுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரால் நான் பணிக்கப்பட்டதற்கு அமைவாக சனிக்கிழமையன்று (25.03.2017) கல்குடா பொலிஸில் கட்டிட நிருமாண வேலைகளைத் தடைசெய்யுமாறு கோரி என்னால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.' என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை பகுதியில் மதுபானசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அறிந்தது பற்றி மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தவாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ். வாசுதேவன், மற்றும் பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். ஷிஹாப்தீன் ஆகியோருக்கு 11.06.2016 அன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் கடிதத்தில்,

மட்டக்களப்பில் அளவுக்கதிமான மதுபான சாலைகள் உள்ளதால், அது சமூகச் சீரழிவுகளுக்கும் வறுமை நிலைக்கும் இட்டுச் செல்கின்றது. எனவே, இனிமேல் புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என அந்தக் கடிதத்தில் அவர் அதிகாரிகளைக் கேட்டிருந்தார்.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் சுமார் 82 மதுபானசாலைகளே இருக்க முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளபோதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 62 மதுபான சாலைகளுக்கு மேல் உள்ளன.

இதற்கு எதிராக பொது அமைப்புக்களும் மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர் என்றும் சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -