எம்.ஜே.எம்.சஜீத்-
ஏறாவூர் பிரதேசத்தில் காணியற்றோருக்கு காணிகளைப் பங்கீடு செய்து வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,’ஏறாவூர் பிரதேசமானது 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கியதாக 10,701 குடும்பங்களுடன் மொத்தம் 40,000 சனத்தொகையைக் கொண்டமைந்துள்ளது. குறிப்பாக 1990ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இப்பிரதேசத்திலிருந்து வெளியேறி, தங்களது உறவினர்களின் வீடுகளில் வசித்தும் வருகின்றார்கள்.
தற்போது இங்கு குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகப் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. சன நெருக்கடியும் குடியிருப்புகளுக்கான காணி இல்லாத நிலைமைகளும் காணப்படுகின்றன. அண்மையில் ஏறாவூர் பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்ட காணிக் கச்சேரி மூலம் 2,500 பேருக்கு காணி வசதி தேவையாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 13.02.2017 ஆம் திகதி நடைபெற்ற ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, மேற்படி 2,500 பேருக்கு காணி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தங்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவினுடைய அறிக்கையின்; படி 379 ஏக்கர் காணி ஏறாவூர், புன்னக்குடாவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, காணிக் கச்சேரி அறிக்கை மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தீர்மான அறிக்கையின் பிரகாரம் குறித்த காணியை பங்கீடு செய்து வழங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றேன்’ என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.