எம்.ஜே.எம்.சஜீத்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 95 வீதம் வாக்களித்து ஆதரவினை வழங்கியும் கோணாவத்தை பிரதேசம் அபிவிருத்தி பணிகளின் போது புறக்கனிக்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் திட்டத்திலிருந்து அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள அந்-நூர் மகா வித்தியாலயம் நீக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து பாடசாலைக்கு முன்பாக நேற்று (7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பிரதேச மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கோணவாத்தைப் பிரதேசமானது ஏழை மக்கள் வாழும் ஒரு பின்தங்கிய பிரதேசமாகும். இங்குள்ளவர்கள் அன்றாடம் மீன்பிடித் தொழிலினை செய்தே தங்களது வருமானத்தை ஈட்டிக்கொள்கின்றனர். இப்பிரதேசத்தில் வாழும் நாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினையே ஆதரிக்கின்றோம். 95 வீதமான வாக்குகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே வழங்குகின்றோம்.
இருந்தாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கின்ற போது கோணாவத்தை பிரதேசம் புறக்கனிக்கப்படுகிறது. இப்பிரதேச மக்களின் வாக்குப் பலத்தினால் ஒவ்வொரு பிரதேச சபை தேர்தல்களிலும் மக்கள் பிரதிநிகளாக நாங்கள் மு.கா சார்பாக பிரதேச சபைக்கு அனுப்புகின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் திட்டத்திலிருந்து எமது பிரதேசத்தில் அமைந்துள்ள அந்-நூர் மகா வித்தியாலயம் நீக்கப்பட்டுள்ளமை ஏமாற்றமளிக்கிறது. பல வழிகளிலும் புறக்கனிக்கப்படும் எமது பாடசாலை தற்போது பல்வேறு வளப்பற்றாக்குறையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. எமது பிரதேசத்திற்கு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் துரோகமிழைப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
குறிப்பாக பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் மு.கா கட்சியினால் எந்தவொரு பணிகளையும் கோணாவத்தை மண்ணில் எமது கட்சி மேற்கொள்ளாமை கவலையளிக்கிறது. அரசாங்கத்தினுடைய பொதுவான சில திட்டங்களினுடாகவே சில அபிவிருத்திப் பணிகள் கோணாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் தெரிவித்தனர்.