இலங்கையில் போர் முடிந்த கையோடு, மேற்குலக நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்றம் பற்றி கடுமையான ஆட்சேபனைகளை முன் வைத்து ஐ.நாவின் மனிதஉரிமை சபையில் 2009ம் ஆண்டு குற்றப்பிரேரணை ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
அந்த பிரேரணையை மஹிந்த அரசாங்கம், அன்றய ஐ.நா.சபை தூதுவர் டாக்டர் தயான் ஜயதிலக அவர்கள் மூலம் முஸ்லிம் நாடுகளினதும், சீனா ரஷ்யா போன்ற நாடுகளினதும் உதவியுடன் தோற்கடித்து வரலாற்று சாதனை ஒன்றை நிலைநாட்டியிருந்தது. இந்த விடயம் மேற்குலக நாடுகளை குறிப்பாக, அமெரிக்காவை ஆத்திரம் கொள்ளவைத்தது என்பதே உண்மையாகும்.
அதே வேளை இலங்கைக்கு ஆதரவு தெறிவித்த நாடுகள் எல்லாம் அன்று ஒரே குரலில் கூறின, இலங்கையில் நடப்பது உள்நாட்டு பிரச்சினை அதனை அவர்களே தீர்த்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று. (ஆனால் இன்று அந்த நாடுகள் எல்லாம் வாயடைத்துப்போய் உள்ளன, காரணம் இலங்கை அரசாங்கமே அந்த பிரேரணைனை ஆதரித்ததினால்) இந்த பிரேரணைகள் மூலம் ஏதோ ஒன்றை சாதிப்பதற்கு மேற்குலக நாடுகள் திட்டமிடுவதாக கூறி அன்றய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள், அவர்களின் நடவடிக்கைகளுக்கு கடும் ஆட்சேபனை தெறிவித்திருந்தார்.
மேற்குலகம் கூறுவதைப் போல் இங்கே அப்படியொன்றும் மனித உரிமைகள் மீறப்படவில்லையென்றும், அப்படி ஏதாவது நடந்திருந்தால் உள்நாட்டுக்குள்ளே நாங்கள் விசாரணை நடத்தி உரிய தண்டனையை அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குவோம், இதில் நீங்கள் தலையிட தேவையில்லை என்றும் கூறிவந்தார்.
இந்த கருத்தினை முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து ரஸ்யா, சீனா போன்ற நாடுகளும் ஆதரித்து கருத்து வெளியிட்டு வந்தன. மேற்குலக நாடுகளின் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டால் பல ராணுவ வீரர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டிவரலாம், அதே நேரம் அந்த யுத்தத்தை வழிநடத்திய முக்கிய தலைகளும் அதில் மாட்டிக்கொள்ளலாம் என்ற காரணத்தினால்தான், அன்றய அரசு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற என்னத்தில் அந்த விசாரணையை கடுமையாக எதிர்த்து வந்தது.
அதே நேரம் இலங்கை அரசாங்கம் அதனை தைரியமாக எதிர்ப்பதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது என்ன காரணம் என்றால், ரோம் நிறைவேற்றுச் சட்டத்தின் அடிப்படையிலான பண்ணாட்டு குற்றவியல் நீதி மன்றத்தின் முன் இலங்கையை கொண்டுவரமுடியாது. ஏன் எனில் இதுவரையிலும் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளில் இலங்கை இல்லை.(இந்தியா, சீனா ,ரஷ்யா ,கியூபா , அமெரிக்கா போன்ற நாடுகளும் அதில் ஒப்பமிடவில்லை) அதனால் இந்த முறையில் இலங்கையை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்ற விடயமே அதுவாகும்.
ஆனால் ஐ.நா பாதுகாப்புச் சபையினூடாகவும் விசாரைணை நடத்த முடியும், அப்படி அந்த வழியால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்தி அதில் இலங்கை தோல்வியடைந்தாலும், அந்த தீர்மானத்தை நடைமுறைப் படுத்த பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லவேண்டி வரும் அந்த நேரம் சீனாவும், ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த பிரேரணையை நீர்த்துப்போக செய்ய முடியும்.( இப்படித்தான் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான124 தீர்மானங்களை கடைசிநேரத்தில் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்தி தோற்கடித்திருந்தது).
ஆகவே, எந்த வழியிலும் இலங்கை மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்கமுடியாது என்ற தைரியத்தில் மஹிந்த அரசு அதனை எதிர்த்து வந்தது என்பதே உண்மையான காரணமாகும். இப்படியான சூழ் நிலையில்தான் மேற்குலகம் மஹிந்தவை தோற்கடித்துவிட்டு ஆட்சியை கைப்பற்றிய நல்லரசாங்கத்திடம் நாங்கள் உங்களுக்கு உதவிகளை அள்ளித்தறுகிறோம் என்றுகூறி ஆசைவார்த்தை காட்டி ஐ.நா. சபையின் தீர்மானத்தை ஏற்கவைத்தனர்.
ஆட்சியை கைப்பற்றிய நல்லரசாங்கம் மஹிந்தவை விட கூடுதலான அபிவிருத்திகளையும், சேவைகளையும் வழங்கி நாட்டுமக்களின் மத்தியில் எங்கள் ஆட்சி நல்ல ஆட்சியென்று பேர் எடுக்கவேண்டும் என்ற அவசரத்தில், மேற்குலக நாடுகளின் பொய் வாக்குறுதிகளை நம்பி தீர்மானத்தை வழிமொழிந்து முன்பின் யோசியாமல் ஐ.நா சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர்.
அவர்களின் தீர்மானத்தின் படி வெளிநாட்டு நீதிபதிகள் முன் விசாரணை செய்வதற்கு ஒத்துக்கொண்டுவிட்டு, இப்போது நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று புரிந்து கொண்டு "பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள்" என்ற நிலைக்கு நல்லரசாங்கம் மாட்டிக்கொண்டு முழிப்பதை காண்கின்றோம்.
இதனை சிங்கள மக்களும், இலங்கை ராணுவமும் உன்னிப்பாக கவணித்து வருகின்றார்கள், இவர்களின் நடவடிக்கை இலங்கை நாட்டை மேற்குலகிடம் காட்டிக்கொடுத்த செயலாகவே பெரும்பாண்மை மக்கள் என்னுகின்றார்கள், இந்த நிலைப்பாடு நல்லரசாங்கத்துக்கு சாவுமணியாகவும் அமையலாம் என்ற பயத்தில் நல்லரசாங்கம் இந்த விடயத்தில் தடுமாறுகின்றுது என்றால் அதுதான் உண்மையாகும்.
ஐ.நா. சபையும் இவர்களை விடுவதாக இல்லை, நீங்கள் ஒத்துக்கொண்ட விடயத்தையே நாங்கள் அமுல் படுத்த சொல்லுகின்றோம், அப்படியென்றால் நீங்கள் ஏன் அந்த பிரேரணையை ஒத்துக்கொள்ளவேண்டும் என்றும் கேள்விகள் வேறு எழுப்புகின்றார்கள். ஆகவே, நடவடிக்கை எடுப்பதற்கு நீங்கள் கேட்கும் இரண்டு வருடத்தை தருகின்றோமென்று ஐ.நா.சபை கடும் நிபந்தனைகள் விதித்து, இறுதியான ஒரு தவணையையும் வழங்க முன்வந்துள்ளது. இந்த விடயங்கள் நல்லரசாங்கத்துக்கு அவசரத்தில், "குளிக்க போய் சேற்றை அள்ளி பூசின "சீலமாக மாட்டிக்கொண்டதையே காட்டுகின்றது.
இனி எந்த அரசாங்கம் வந்தாலும் இந்தநிலையில் இருந்து மீளவே முடியாது என்பதே உண்மையாகும். சிங்கள மக்களை பொறுத்தவரை இன்றய அரசாங்க தலைவர்களை, நாட்டைக்காட்டிக்கொடுத்தவர்கள் பட்டியலில் சேர்க்காமல் விடமாட்டார்கள் என்பதே உண்மையாகும்.
எம்.எச்.எம்.இப்ராஹிம்,
கல்முனை.