தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கெதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸ்ஸதீன் முன்னிலையில், புதன்கிழமை 08.03.2017 இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு குற்றப்பத்திரம் வாசித்துக் காட்டப்பட்டதுடன், சந்தேகநபர்களிடமும் அதன் பிரதி கையளிக்கப்பட்டது.
கொலை செய்தமை, கொலைக்கு எத்தனித்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட எட்டுக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது, 4 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றத்தடுப்புப் பிரிவின் சார்பில், மன்றில், புதன்கிழமை 08.03.2017 ஆஜராகியிருந்த அதிகாரிகள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரில் 4 பேரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏனைய மூவரையும் இன்னமும் தேடி வருவதாகவும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவரான கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சார்பில் 6 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மூன்றாவது சந்தேகநபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்பதால், அவர் மாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும் என்பதுடன், சிறைச்சாலையிலும் நீதிமன்றத்துக்குள்ளும் அவருக்குப் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்து நின்றனர்.
இக்கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கும், நீதிமன்றப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கும், நீதிபதி கட்டளையிட்டார்.
அத்தோடு, ஏனைய விடயங்களில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறையைப் பின்பற்றுமாறும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை (08.03.2017) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட மேற்படி வழக்கு, எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.