இந்த சூழ்நிலையில் பலர் ஜோதிடக்காரர்களாக மாறி மாகாண சபை இன்று கலையும் நாளை கலையும் என ஆரூடம் கூறிக் கொண்டு திரிவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
வாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் இடம் பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண’டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமும் இணைந்த இந்த கிழக்கு மாகாண ஆட்சியில் கடந்த ஆட்சியாளர்கள் செய்யாத பல சேவைகளை மக்களுக்கு நாம் செய்திருக்கின்றோம்.கடந்த 2016 ஆம் ஆண்டு இதற்கு முன்னர் இருந்த மாகாண சபைகளுக்கு பெற்றுக் கொடுக்க முடியாத நிதியை நாம் இந்த மாகாணத்திற்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்,
பிரச்சினைகளை உருவாக்கி அதனூடாக மக்களை உணர்ச்சிவசப்படுத்தி மேற்கொள்ளப்படும் வியாபர அரசியல் செய்பவர்கள் அல்ல.அவ்வாறான அரசியல’ செய்வதற்கான எந்த விதமான தேவையும் எங்களுக்கு இல்லை.மக்களுடைய பிரச்சினைகளை அடையாளங்கண்டு அவற்றை தீர்க்கும் அரசியலையே நாம் செய்து வருகின்றோம்,
எமக்கு கையில் நிதி கிடைத்த பின் தான் எந்தவொரு திட்டத்திற்கும் நாம் அடிக்கல் நடுகின்றோம்,நான் இந்த இடத்தில் ஒரு சவால் விடுக்க விரும்புகின்றேன் எங்கள் அமைச்சர்கள் மீதோ இருக்கும் ஒரு ஊழல் குற்றச்சாட்டை காட்டுங்கள்,கடந்த காலத்தில் இருந்த ஊழல் குற்றச்சாட்டுக்களும் இன்று தேசிய அரசாங்கத்தில் இருக்கும் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன,எனவே ஊழலற்ற ஆட்சியை முன்னெடுத்து தேசிய அரசாங்கத்துக்கே கிழக்கு மாகாண சபை முன்னுதாரணமாக இருக்கின்றது.
அது மாத்துரமன்றி நாம் செயற்திறனாக இயங்கவில்லை என்றும் யாரும் எம்மீது குற்றம் சுமத்த முடியாது ,எமது மாகாண சபைக்கு அபிவிருத்திப் பணிகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட வீணாக திரும்பிப் போகவில்லை,இன்று கிழக்கில் வளம் குறைந்த பாடசாலைகளாக இருந்த பல பாடசாலைகள் இன்று வளம் மிக்க பாடசாலைகளாக மாறி இருக்கின்றன.இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மேலும் பல பாடசாலைகளையும் உள்ளீர்த்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்,
கிழக்கு மாகாண கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டுவரை வௌி மாகாணங்களிலேயே நியமனம் பெற்று வந்தனர்.ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அவர்களுக்கு சொந்த மாகாணத்திலேயே நியமனம் வழங்கி அந்த நடைமுறையை பாரிய போராட்டத்துக்கு மத்தியில் மாற்றியுள்ளோம்.
அவை எல்லாவற்றையும் விட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு,ஐக்கிய தேசியக் கட்சி,ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து ஒரு நல்லாட்சியை முன்னெடுத்து வருகின்றோம்.அரசாங்கத்தில் இரண்டு கட்சிகள் முன்னெடுக்கும் ஆட்சிக்குள்ளேயெ பல முரண்பாடுகள் பகிரங்கப்படுத்தப்பட்டு இன்று இரு பிரதான கட்சிகளின் அரசியல்வாதிகளே மேடைகளில் பகிரங்கமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்,
ஆனால் நாம் நான்கு சுவர்களுக்குள் எமக்கு எழும் பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வு கண்டு இனமத மொழி பேதம் பாராது அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றோம்,
இதையெல்லாம் சகிக்காதவர்கள் தான் மாகாண சபை இன்று கலையும் நாளை கலையும் என்று கூறிவருகின்றார்கள்,ஆனால் அவர்களின் பகற்கனவு எப்போது கலையும் என்று தான் தெரியவில்லை.
ஆனால் எமது மாகாண சபையின் செயற்திறனைக் கண்டு சில அமைச்சர்களே அச்சப்பட்டுள்ளமையே எமது இரண்டு வருட ஆட்சியின் சாதனை எனக் கருதுகின்றோம்,
கிழக்கு மாகாண சபையை நான் கையெழுத்திடாமல் கலைக்க முடியாது என்பதை முதலில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.