க.கிஷாந்தன்-
'மலையகத் தமிழ் சமூகத்தின் நலன் கருதி இளைஞர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எமது சமூகத்தை மேலும் முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்ல முடியும்' என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ,ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளனம், ஸ்ரீலங்கா இளைஞர் பாராளுமன்றம் ஆகிய இணைந்து முன்னெடுத்து வருகின்ற யுத் கொட் டெலன்ட கருத்திட்டத்தின் கீழ் போஹவத்தை செம்மொழி இளைஞர் கழகத்தினால் திம்புள்ள தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகம், பொது மேடை என்பனவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செம்மொழி இளைஞர் கழகத்தின் ஸ்தாபகர் சுப்பையா விஜயகாந்த் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் நுவரெலியா பிரதேச செலயகத்துக்கு உட்பட்ட பகுதியின் இளைஞர் சேவைகள் அதிகாரி சதீஸ், இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.சதீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் போது செம்மொழி இளைஞர் கழகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்ள் பாராட்டப்பட்டனர்.
ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
'இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வழங்கப்பட்ட 75 ஆயிரம் ரூபாவை வைத்துக் கொண்டு சமூகத்தின் பலதரப்புடன் தொடர்பு கொண்டு அவர்களின் ஒத்துழைப்பை; பெற்றுக்கொண்டு 6 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் பொதுமேடை ஒன்றும் பொது நூலகமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையானது பாராட்டத்தக்க விடயமாகும்.
இளைஞர்கள் ஒற்றுமையுடன் செயற்படுகின்றபட்சத்தில் இத்தகைய சாதனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போராட்டத்தில் ஒன்றிணைந்த இளைஞர்களின் சக்தி எத்தகையது என்பதை இன்று முழு உலகமும் புரிந்து கொண்டுள்ளது. எனவே இளைஞர்களின் சக்தியை நாம் நல்ல விடயங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் போது சமூகத்தில் நல்ல பல மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். இன்று இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். செம்மொழி மன்றத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நூலகத்தின் மூலமாக திம்புள்ள தோட்ட மக்கள் முழுமையான பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வாசிப்பு அறிவும் எழுத்தறிவும் இன்று மனிதனுக்கு இன்றியமையாதவையாகும். வாசிப்பதனால் எமக்கு மொழியாற்றல் ஏற்படுகின்றது. சிந்தனை அறிவு விருத்தியடைகின்றது. இன்றைய நவீன உலகத்தில் ஸ்மார்ட் போன் , வட்ஸ்சப் , பேஸ்புக் என்பனவற்றின் மூலமாக பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
வாசிப்புக்கு இத்தகைய இத்தகைய நவீன ஊடகங்களும் எமக்கு உதவுகின்றன. இவற்றை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய உலகில் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு இணைத்தள வசதிகளுடன் கூடிய நூலகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய நூலகங்களையும் நாம் எதிர்காலத்தில் மலையகத்தில் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நூலகத்திற்கு எனது நிதியின் ஊடாக நூல்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். எனவே இளைஞர் சமூகத்திற்கு நாம் உரிய வகையில் ஒத்துழைப்பு வழங்கி அவர்களின் திறமைகளுக்குக் களம் அமைத்துக்கொடுக்க வேண்டும் ' என்றார்.