''கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போதே இறந்து விட்டிருந்தார்; அவரது உடலில் நாடித் துடிப்பு இருக்கவில்லை; சுவாசம் நின்று போயிருந்தது. அவர் வெறும் சடலமாகத் தான் அப்போலோ ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டார். அப்போது நான் பணியில் இருந்தேன்!' என்று அதிரடியாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய டாக்டர் சீதா இன்று சைபர் கிரைம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது. அவரது மரணத்தில் மர்மம் நிலவுவதாகப் பெரும் கூக்குரல்கள் எழுந்திருந்தன. இந்நிலையில் அப்பலோ ஆஸ்பத்திரியில் பணியாற்றியதாகச் சொல்லப்படும் டாக்டர் சீதா என்பவர் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகப் பரவியது. அதில் அவர் ''ஜெயலலிதாவின் இறந்த உடலே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. அவரது உடலில் நாடித் துடிப்பு இருக்கவில்லை. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த உண்மையை நான் விசாரணை கமிஷனிடம் கூறத் தயார்!'' என்றும், ஜெயலலிதா மரணத்தினாலேயே தான் பணியிலிருந்து விலகிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் பொலிசார் சீதாவை இன்று கைது செய்துள்ளனர்.
