தமிழ் மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளாது அபிவிருத்தியிலும் வேலைவாய்ப்பிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். வடக்கு மக்கள் புலிகளுக்கு வாக்களித்தார்கள் என்பதற்காகவும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தார்கள் என்பதற்காகவும் கடந்த ஆட்சியினரால் வீதிக்கு இறக்கப்பட்டனர். இந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது. வடமாகாணத்திற்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய நாட்டின் 100 மில்லியன் ரூபா, உலக வங்கியின் 50 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் குறிகட்டுவானுக்கும் நெடுந்தீவுக்குமான பாதுகாப்பான போக்குவரத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் படகுச் சேவையினை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று குறிகாட்டுவான் இறங்குதுறையில் நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலிய தூதுவர், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந் தும் உரையாற்றிய இராஜாங்க அமைச் சர் விஜயகலா மகே ஸ்வரன். கடந்த இருபது வருடங்களாக தீவுப்பகுதிகளுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் இருக்கவில்லை. தற்போது இந்தப்படகினை வழங்கியன் மூலம் போக்குவரத்துக் கான வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் வரட்சிக்கும் வறுமைக்கும் நாம் முகம்கொடுத்து வருகின்றோம். வடக்கில் வழமையாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலேயே வரட்சி ஏற்படுவது வழக்கமாகும். ஆனால் தற்போது ஜனவரியிலேயே வரட்சி ஏற்பட்டிருக்கிறது. வரட்சியினால் வடக்கு, கிழக்கு பகுதி மக்களே அதிகளவில் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் உரிய படகுச்சேவையின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். உரிய போக்குவரத்து வசதி இன்மையால் இவர்கள் தொன்றுதொட்டு கஷ்டப்பட்டு வருகின்றனர். இப்பகுதிகளுக்கு அரசாங்க ஊழியர்கள் நியமிக்கப்படும்போது அவர்கள் போக்குவரத்து கஷ்டம் காரணமாக அங்கு செல்வதற்கு மறுக்கின்றனர். சிலர் தீவுப்பகுதிக்கு கடமையாற்றுவதற்கு செல்வதே இல்லை. இதனால் தீவுப்பகுதி மாணவர்கள் கல்வி துறையில் பின்தங்கியுள்ளனர். கல்வி உட்பட சகல வசதிகளையும் இவர்கள் இழந்திருக்கின்றனர்.
உரிய போக்குவரத்து சேவையின்மையால் இந்த மக்கள் பெரும் பாதிப்புக்களை சந்திக்கின்றனர். கடந்த முப்பதுவருடகால யுத்தத்தின் போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்தனர். இதேபோல் தீவுப்பகுதியும் உரிய போக்குவரத்து வசதியின்மையால் பாதிக்கப்பட்ட பகுதியாகவே காணப்படுகின்றது. அனலைதீவு, எழுவைதீவு, நயினாதீவு உட்பட தீவுப்பகுதிக்கான படகுச்சேவையை அதிகரித்து போக்குவரத்தினை இலகுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது.
யுத்தத்திற்கு முன்னர் கல்வியில் சிறந்துவிளங்கிய வடமாகாணம் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்காலத்தில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். புலிகளுக்கு வாக்களித்தார்கள் என்பதற்காகவும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தார்கள் என்பதனாலும் வடபகுதி மக்களை கடந்த அரசாங்கம் வீதிக்கு இறக்கியிருந்தது. வட மாகாணத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. நிதி வழங்கப்பட்டிருக்கவில்லை. வடமாகாண முதலமைச்சருக்கு சரியான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். முதலமைச்சரின் அதிகாரங்களை அதிகரிப்பதுடன் மாகாண சபைக்கும் உரிய நிதியும் அதிகாரமும் வழங்கப்படவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஒருவரை இடமாற்றுவது என்றால் கூட மாகாணசபையானது மத்திய அரசிடம் செல்லவேண்டிய சூழல் காணப்படுகின்றது.
ஏனைய மாகாணங்களில் முதலமைச்சரும், ஆளுநரும் இணைந்து பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்றனர். எமது வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரி பல வருடங்களாக போராடி வருகின்றனர். ஆனால் இன்னமும் உரிய நியமனம் வழங்கப்படவில்லை. அண்மையில் வேறொரு மாகாணத்தில் 1987 ஆம் ஆண்டு முதல் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதை தொலைக்காட்சி செய்திமூலம் நான் பார்த்தேன். இவ்வாறான நிலையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இத்தகைய சந்தர்ப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தவறானதாகும்.
கடந்த 30 வருடகாலமாகவே நெடுந்தீவு, அனலைதீவு, ஊர்காவற்றுறை, வேலணை, உட்பட தீவுப்பகுதிகளில் வீதிகள் போடப்பட வில்லை. உரிய போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவில்லை. இத்தகைய குறைபாடுகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் தீர்வுகாணவேண்டும். தீவுப்பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களுக்கு கூடுதலான நிதி வழங்கப்படுதல் வேண்டும். 2002 முதல் 2004 வரை எனது கணவர் மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது காரைநகர் பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் கடந்த அரசாங்க காலத்தில் மகேஸ்வரனின் குடும்பத்திற்காக காரைநகர் மக்கள் பழிவாங்கப்பட்டனர். எனவே இத்தகைய பிரதேச சபைகளுக்கு கூடுதல் நிதிகள் வழங்கப்படுதல் வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகு திக்கு விகிதாசார அடிப்படை யில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்க மும் தவறிழைத்து வருகின்றது.
பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்ற மாணவர் கள் மரக்கறி விற்பதிலும், வீதிகளை செப்பனி டும் பணிகளிலும் ஈடுபடும் நிலை காணப்ப டுகின்றது. இந்த நிலைமை மாற்றியமைக்கப் படவேண்டும். நல்லாட்சி அரசாங்கமானது சரியான முறையில் வேலைவாய்ப்புக்களை வழங்கவேண்டும். தற்போதும் வடபகுதிக்கு தென்பகுதியிலுள்ளவர்களை நியமிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.
இத்தகைய நியமனங்கள் நிறுத்தப்படவேண்டும். மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளாது வீதியில் இறக்காது அபிவிருத்தியிலும் வேலைவாய்ப்பிலும் வடபகுதி மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றார்.