அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றி இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றுள்ள சம்மாந்துறை மத்திய கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மெஸ்ரோ அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (19) வியாழக்கிழமை சம்மாந்துறை மத்திய கல்லூரி வளாகத்தில் கல்லூரி அதிபர் ஏ.சி.ஏ. முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்; விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர், மெஸ்ரோ அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நசீல், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், பிரதி கல்விப் பணிப்பாளர் சகாதேவராஜா, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, சம்மாந்துறை மத்திய கல்லூரி பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி கே.எல். பாதிமா றுஸ்லியாவை பிரதி அமைச்சர் பாராட்டி கௌரவித்து மடிகணினி வழங்கினார். அத்தோடு பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றுள்ள ஏனைய மாணவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு சாண்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் குறித்த பாடசாலை மைதானத்தை அபிவிருத்தி செய்யும்வகையில் இதன்போது பார்வையிட்டு அதன் குறைபாடுகளை கேட்டறிந்ததோடு அம்மைதான அபிவிருத்தியினை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.