பாறுக் ஷிஹான்-
நாடுதழுவிய ரீதியில் 29 தபாற்சங்கங்கள் இணைந்து இன்றும்(20) நாளையும்(21) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனடிப்படையில் இன்று(20) யாழ் பிரதான தபால் நிலையமும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபhல் நிலையத்தின் சகல பிரிவுகளும் முடங்கியுள்ளன.
இந்த பகிஸ்கரிப்பானது தபால் சேவையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
க.கிஷாந்தன்-
தபால் சேவையாளர்கள் 19.12.2016 அன்று நள்ளிரவு முதல் 7 கோரிக்கைகளை முன்வைத்து 20.12.2016 அன்று நள்ளிரவு 12 மணிவரை அடையாள வேலைநிறுத்த போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் தபாலுடன் தொடர்புடைய பல்வேறு சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக சமூக சேவை அமைச்சினால் வழங்கப்படும் முதியோருக்கான கொடுப்பனவினை 20.12.2016 அன்றைய தினம் பெறமுடியாது தூர பிரதேசங்களில் இருந்து வருகை தந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பலர் இந்நிதியினை கொண்டே தமக்கு மருந்துகளை பெறவேண்டி இருப்பதாகவும் 20.12.2016 அன்றைய தினம் வேலை நிறுத்தம் காரணமாக தமது மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாது இருப்பதாகவும் குரங்குமலை, எபோட்ஸிலி, செனன் போன்ற தூர இடங்களில் வருகை தந்தும் இன்று பெற முடியாது போனதாக இவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை 20.12.2016 அன்றைய தினம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் தினமாக இருப்பதனால் சம்பளப்பட்டியல் பாடசாலைகளுக்கு செல்லாததன் காரணமாக அதிபர்கள் பெரும் நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சங்க கோரிக்கைகளுக்கு 14 நாட்களுக்குள் அரசு தீர்வு பெற்றுக்கொடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தபால் ஊழியர்கள் தெரிவித்தனர்.