"ஆள் அடையாளம் உறுதிப்படுத்திய பின்னர் அவ்வாறு இருந்தவாறே தேர்வு எழுத வேண்டும்" சுற்றறிக்கை நீக்கம்
இலங்கையில் தற்போது நடைபெறும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகளை பர்தா மற்றும் ஹிஜாப் போன்ற உடை அணிந்து பரீட்சை எழுதுவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா இது தொடர்பில் கருத்தில் எடுத்து இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரிய வசம் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பமான இத் தேர்வு, எதிர்வரும் 17ம் வரை நடைபெறுகின்றது. ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தல் தொடர்பாக பரீட்சைகள் ஆணையரால் இம்முறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை காரணமாகவே இந்த சர்ச்சை எழுந்திருந்தது தொடர்ந்தும் பரீட்சார்த்தியொருவரின் ஆள் அடையாளம், தேர்வு எழுத முன்னர் மேற்பார்வையாளர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஏற்கனவே நடைமுறையிலிருந்த சுற்றறிக்கையாகும்.
இம் முறைவெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் ஆள் அடையாளம் உறுதிப்படுத்திய பின்னர் அவ்வாறு இருந்தவாறே தேர்வு எழுத வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசார ரீதியான அடையாளத்தை பிரதிபலிக்கும் உடைகளை அணிதல், பாடசாலை அல்லாத பரீட்சார்த்திகளில் ஆண்கள் தாடியுடன் தோற்றுதல் போன்றவை தொடர்பாக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூறப்பட்டது
கண்டி, அனுராதபுரம், குருநாகல், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இது தொடர்பான முறைப்பாடுகள் பதிவானதை அடுத்தே அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்தியதுடன் இவ்விவகாரம் தொடர்பில் பிரதமருடனும் கல்வியமைச்சருடனும் நேரடியாக தொலைபேசி மூலம் அமைச்சர் அமைச்சில் இன்று உரையாடினார். அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களின் வேண்டுகோளை ஏற்று சற்றுமுன்னர் பிரதமர் கல்வியமைச்சரிடம் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி மேற்கிறிப்பிட்ட சுற்றறிக்கையை நீக்குவதற்கு தீர்மானித்தனர்.
