எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதாக வாக்குறுதி தரப்பட்ட இடத்தில் வேறு கட்டடங்கள் கட்டுவதை உலமா கட்சி கண்டித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது,
கல்முனை கரையோர மாவட்ட மீனவர்கள் தமக்கென மீன்பிடி துறைமுகம் இல்லாமல் பல காலங்களாக பாரிய கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். வாடைக்காற்று வீசும் காலங்களில் தமது வள்ளங்களை நிறுத்துவதற்கு இடமின்றி வேறு மாவட்டங்களில் அவற்றை கொண்டு போய் நிறுத்தும் சிரமத்தை எதிர் நோக்குகிறார்கள்.
இது விடயத்தில் கல்முனையை 25 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்யும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட இம்மீனவர்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்காமல் அப்பாவி மீனவர்களை தேர்தல் காலத்தில் ஏமாற்றி அவர்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளது.
அதே போல் இந்த நல்லாட்சிக்காக கல்முனை கரையோர மீனவர்கள் நூறு வீதம் வாக்களித்தும் இன்று இந்த ஆட்சிக்கெதிராக அம்மக்கள் பகிரங்கமாக ஆர்ப்பாட்டம் செய்யுமளவு நல்லாட்சியாலும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது.
மீனவர்களுக்கான மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட காணியில் வேறு தேவைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்படுவது மீனவர்களுக்கு செய்யும் துரோகமாகும்
அரசாங்கம் இம்மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து அம்மக்களின் வாழ்வு நல்வாழ்க்கையாக மாற நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சி அரசை கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.