முகம்மத் இக்பால், சாய்ந்தமருது -
அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் கடந்த ஆட்சியில் செய்த ஊழல்கள் சம்பந்தமாக விசாரணை செய்ய 29. 08. 2016 காலை பத்து மணிக்கு முன்பாக ஆஜராகுமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவினரிடமிருந்து வந்துள்ள அழைப்பாணையினால் பலவித எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இவ்வார அரசியல் விவகாரம் முக்கிய இடத்தினை பிடித்திருந்தது.
இந்த அழைப்பாணையானது குறித்த தினத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக ஆஜராகுமாறு குறிப்பிட்டிருந்ததனால், அந்த தினம் முற்படுத்தப்பட்டு 26.08.2016 ஆம் திகதியாக மாற்றம் செய்து அணைத்து தரப்பினர்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் மண்ணை தூவிவிட்டு சத்தமின்றி விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்கள். இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளினதும், இலங்கையினதும் நீதிக்கும், ஜனநாயகத்துக்கும் இடையில் உள்ள பாரிய வித்தியாசங்களை அறிந்துகொள்ள முடிகின்றது.
இலங்கை அரசியலை பொறுத்தமட்டில் எவ்வளவுதான் பாரிய சட்டவிரோத குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுவது என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும். எப்படியான ஆதாரங்கள் இருந்தாலும் அத்தனையையும் அதிகாரத்தினைக்கொண்டு குழி தோண்டி மூடி மறைத்து விடுவார்கள்.
அப்படித்தான் நீதி தவறாத ஆட்சி என்று ஒரு பேச்சுக்காவது வைத்துக்கொண்டாலும் FCID, இலஞ்ச ஊழல் அணைக்குழு, CID போன்ற பிரிவினர்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை விசாரணைக்காக அழைத்திருந்தால், அவரை கைது செய்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்று எண்ணுவதற்கு வாய்ப்பிருந்தது.
ஆனால் அமைச்சரை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினரே அழைத்துள்ளார்கள். இவர்கள் விசாரணைகளை மட்டும் மேற்கொள்வார்களே தவிர, கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. மாறாக போதிய ஆதாரங்களை திரட்டியபின்பே விசாரனைக்காக அழைப்பார்கள். விசாரணையின் பின்பு தங்களது அறிக்கையினை ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பார்கள். ஜனாதிபதியே இறுதி முடிவினை மேற்கொள்வார்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்ததுதான் தாமதம், அதன் கவனத்தினை திசை திருப்புவதற்காக ரகசியம் பேணப்படவில்லை என்றும், தனக்கு அழைப்பு கிடைக்க முன்பே ஊடகங்களுக்கு எவ்வாறு செய்தி வெளியானது என்றெல்லாம் பாசாங்கு செய்தார்கள். ஆனால் அவைகள் ஒன்றும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
அதன் பின்புதான் கடந்த ஆட்சியில் வர்த்தக அமைச்சராக இருந்த யாரோ ஒருவர் செய்த ஊழல் மோசடிக்காக தற்போதைய அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் ரிசாத் அவர்களை விசாரணைக்காக அழைத்துள்ளதாக புதுக்கதை ஒன்று அமைச்சர் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம் மக்களை அந்த அளவுக்கு முட்டாள்கள் என்று எண்ணி உள்ளார்களா?
இவர்கள் குறிப்பிட்டதுபோன்று கடந்த ஆட்சியில் வர்த்தக அமைச்சராக இருந்த ஜோன்சன் பெர்னாண்டோ அவர்கள் இப்போதும் உயிரோடுதான் இருக்கின்றார். அதிலும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்றார். அதனால் இலகுவான முறையில் அவரை விசாரிக்கலாமே? ஏன் ஒரு அமைச்சரை, அதிலும் ஒரு கட்சி தலைவரை விசாரணைக்காக அழைத்து அவமானப்படுத்த வேண்டும்?
ஒரு அமைச்சில் ஊழல் நடைபெற்று இருந்தால் அந்த அமைச்சின் அன்றைய செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளை விசாரிக்க வேண்டும். அவர்களே அனைத்துக்கும் பொறுப்புதாரிகள். அதைவிடுத்து ஏன் ஒரு அரசாங்கத்தின் பங்காளியை விசாரிக்க வேண்டும்?
தன்மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை வெளியிடுவதனை தடுத்து, தன்னை சத்திய தேசிய தலைவர் என்று உண்மைக்கு புறம்பாக புகழ்பாடவைப்பதற்கு பெரும்பாலான ஊடகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தெரிந்த அமைச்சர் ரிசாத் அவர்களுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவினரிடம் இருந்து அழைப்பாணை வருவதனை முன்கூட்டியே தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது ஏன்?
விடயம் இதுதான், ஆதாரம் இன்றி எவரையும் விசாரணைக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினர் அழைக்க மாட்டார்கள். அதிலும் ஒரு அமைச்சரவையில் உள்ள அமைச்சரை அழைப்பதென்றால் அத்தனை குற்றச்சாட்டுக்களும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
இந்த நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட அத்தனை ஆதாரங்களையும் கொண்டு விசாரணைக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினர் ஒரு அமைச்சருக்கு அழைப்பாணை அனுப்பியதனால், அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற இந்த அரசாங்கத்தினை தர்மசங்கட நிலைக்கு தள்ளியுள்ளது. அமைச்சர் ரிசாத் விசாரிக்கப்பட்டால், மகிந்த ஆட்சியில் ஊழல் செய்துவிட்டு இன்றைய நல்லாட்சியில் இருக்கின்ற இன்னும் பல அமைச்சர்களையும் விசாரிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். இதனால் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினால் அமைச்சர் ரிசாத்தை காப்பாற்றி உள்ளார்கள்.
அழைக்கப்பட்ட 29 ஆம் திகதி அணைத்து ஊடகங்களும் இந்த விசாரணையை பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், விசாரணைக்கான தினம் மாற்றப்பட்டு அத்தனை எதிர்பார்ப்புக்களும் நல்லாட்சி அரசாங்கத்தினால் புஸ்வானமாக்கப்பட்டுள்ளது. அதாவது எந்தவொரு விசாரணைகளும் குறித்த தினத்தில் நடைபெறமாட்டாது. ஜனாதிபதி ஆணைக்குளுவினரை திருப்திபடுத்தவே அமைச்சர் ரிசாத் ஆணைக்குழு முன்பாக ஆஜராக்கப்பட்டார்.
எனவே இதன்மூலம் அமைச்சரை 29 ஆம் திகதி அழைத்தது என்ற செய்தி பொய்யானது என்று கூற முற்படுவதுடன், இத்தனை விடயங்கள் அரங்கேறியும், மக்களை முட்டாள்கள் என்று நினைத்து விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்றே அமைச்சர் தரப்பு பிரச்சார அரசியல் காணப்படுகின்றது.