எப்.முபாரக்-
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிணைக்கு கையொப்பாம் இட்ட நபர் ஒருவரை ஐம்பதாயிரம் ரூபாய் சதுரப்பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா நேற்று செவ்வாய்கிழமை (23) உத்தரவிட்டார். நாச்சிக்குடா, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் முதலை வகையினைச் சேர்ந்த பள்ளிகள் பதினெட்டினை முச்சக்கர வண்டியில் சீனக்குடாவிலிருந்து கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு சென்ற நபரை பொலிஸாரால் கைது செய்த போது பிணையாளராக கையொப்பம் இட்டிருந்தார் என தெரியவருகின்றது.
பிரதான சந்தேகநபர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதால் அந்நபருக்கு பிணையாளராக கையொப்பம் இட்ட நபரை திங்கட்கிழமை (22)கைது செய்ததாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிணையாளரான சந்தேகநபரை பொலிஸார் செவ்வாய்கிழமை (23) திருகோணமலை நீதிமன்ற நீதிவான்முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே ஐம்பதாயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார்.