கல்முனை பிராந்தியத்தின் பல் துறை மேம்பாட்டிற்காக இயங்கிக்கொண்டு வரும் கல்முனையன்ஸ் ஃபோரமின் மற்றுமொரு முயற்சியாக - கல்முனை, அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றை கல்முனையில் கடந்த ஞாயிறு 28.08.2016 அன்று ஏற்பாடு செய்திருந்தது. அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட இரத்த பற்றாக்குறையை போக்கும் முகமாக மிக குறுகிய கால இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் காலை 9:00 மணியிலிருந்து மாலை 4:00 மணி வரை கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மார்க்க தலைவர்கள், வர்த்தக பிரமுகர்கள், இளைஞர்கள், யுவதிகள் என சுமார் நூற்றுக்கும் அதிகமானோர்கள் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர். மேலும் மனித நேயத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் இன, மத, பிரதேச எல்லைகளுக்கு அப்பாலும் பல இளைஞர்கள் கலந்துகொண்டு குருத்திக்கொடை செய்தனர் என்பது சிறப்பம்சமாகும்.
நமது சகோதரர்களின் முழு ஒத்துழைப்பாலும், அஷ்ரப் வைத்தியசாலையின் இரத்த வங்கியிற்கு பொறுப்பான வைத்தியர் எஸ். ஏ. நுஸ்ரத் பேகம் அவர்களினதும், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் முழு பங்களிப்புடன் நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
|