மூத்த போராளி-
சம்மாந்துறை விவசாயிகளின் நீண்டகால தேவைகளை நிறைவேற்றுகின்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகளை அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் ஆரம்பித்துள்ளார்.
நீண்ட காலமாக தேக்க நிலையிலிருந்த விவசாயிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் பொருட்டு, அதற்கு தேவையான நிதிகளை இவ்வருடம் பாராளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீடு செய்துள்ளார். கடந்த மாதம் பாராளுமன்றத்திலும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த வாரம் சம்மாந்துறை மோராவில் அணைக்கட்டுக்கு அருகாமையிலுள்ள மொராவில் பிரிவுக்கான நீர்ப்பாசன பிரிவுக்கான அலகுக் காரியாலயத்தில் சம்மாந்துறை விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கூட்டம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் சம்மாந்துறை நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் திருமதி றிப்னா, பிரதேச சபை செயலாளர் சலீம், பிரதேச செயலாளரின் பிரதிநிதியாக கணக்காளர் மஹ்ரூப், நம்பிக்கையாளர் சபை தலைவர் முஸ்தபா, நீர்ப்பாசன திணைக்களத்தில் கடமையாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் தலைவர் செயலாளர்கள் மற்றும் மோராவில் பிரிவுக்குள் அடங்கியுள்ள 16 வட்டைகளின் விவசாய அமைப்புக்களின் தலைவர் செயலாளர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை மோராவில் பிரிவில் பின்வரும் வட்டைகள் அடங்குகின்றன.
பெரிய கொக்கனார, கள்ளியம்பத்த, வடசலியா, சின்ன கொக்கனார, நெடியா வடகண்டம், நெடியான்னா, புதுக்காடு, காட்டாண்ட வட்ட, பவளமடு, கரவாகண்ட வட்ட, கரன்காவட்ட, வீரமனையாண்ட புதுக்காடு, கிளிவெட்டி, மேசன் முன்வாவி வட்ட, பள்ள வெளி.
(1000க்கணக்கான ஏக்கர் விவசாய காணிகள் அமைந்துள்ள பிரதேசத்தை வட்டை என்பர்)
மேற்குறித்த வட்டைகளுக்கான நீர்ப்பாசன வடிச்சல், பாதை தேவைப்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் பெற்றுக் கொடுக்கும் முகமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 10 கோடி செலவில் நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த தினத்தில் மோராவில் நீர்ப்பாசன உப பிரிவு காரியாலயத்திற்கு அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் " வீட்டுக்கு வீடு மரம் " திட்டத்திற்கு அமைய மரநடுகையும் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்கள் " மோராவில் பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்டது போன்று சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அனைத்து விவசாய பிரிவுகளுக்குள் அடங்கியுள்ள வட்டைகளுக்கும் இவ்வாறான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்ள உள்ளேன் " எனக்குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றும்போது " கடந்த 08 வருடங்களுக்கு அதிகமான காலம் சம்மாந்துறைக்கு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமையின் காரணத்தினால் விவசாயிகளின் தேவைகள் கிடப்பிலே போடப்பட்டிருந்தமை நீங்கள் எல்லோரும் அறிந்த ஒரு உண்மையாகும். இதன் காரணமாக ஒரே தடவையில் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியாமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்"
எனக்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்கள் " விவசாயிகளின் பெரும்பான்மையான தேவைகள் அனைத்தையும் இன்சா அல்லாஹ் நிறைவேற்றித்தர முடியும் " எனவும் குறிப்பிட்டார்.