ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-
பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் ஒன்றுபட்டு, ஏனைய சில கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழத்தான் செய்கின்றன. ஆனால், சிலருக்கு தேவைப்படுவதெல்லாம், அவர்களது கட்சி மட்டும் தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்பதாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நாம் எல்லோரும் ஒன்றுபட்டு, ஆதரித்து ஆட்சியில் அமர்த்தினோம். நல்லாட்சி தொடர்பில் வாக்குறுதிகள் பல வழங்கப்பட்டன. அவை படிப்படியாக செயலுருப் பெற்று வருகின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
காலி மாவட்டத்தில், அக்மீமன - ஹரித்தகம – மொரகலை நீர் வழங்கல் திட்டத்தை திங்கட்கிழமை (15) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
ஹரித்தகம என்ற இந்த கிராமம் 2007ஆம் ஆண்டில் ஜெர்மன் தன்னார்வ தொண்டர் நிறுவனமொன்றினால் காலி மாநகர சபை எல்லைக்குள் நிறுவப்பட்டது. ஹரித்தகமயிலும் அதனை அண்டிய மொரகலை கிராமத்திலும் ஏறத்தாழ 225 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
விசேடமாக சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்து, மீள் குடியேறியவர்களினதும் இப்பகுதியிலும் அண்டிய பிரதேசங்களிலும் வசிக்கும் ஏனைய மக்களினதும் தண்ணீர்த் தேவையை நிவர்த்தி செய்வதற்கு இந்தச் செயற்றிட்டம் பெரிதும் உதவுகின்றது. இது குறித்து பாராளுமன்ற அலுவல்கள், ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சியும் என்னிடம் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். மக்களை மையமாகக் கொண்டு இயங்கும் அமைப்புக்களினூடாக முயற்சிக்கும் பொழுது அவை ஏதாவது காரணத்தினால் தடைபட நேர்ந்தால் முழு செயற்றிட்டத்தையும் எங்களை பொறுப்பேற்று நடத்துமாறு கேட்டுக் கொள்வது வழக்கம்.
இதற்கான ஒரு திணைக்களம் எனது அமைச்சின் கீழ் இயங்குகின்றது. அதற்கான நிதி கைவசம் இருக்கின்றது. இந்த செயற்றிட்டத்திற்கான தொழில்நுட்ப உதவிகளையும் நாங்கள் வழங்குகின்றோம்.
பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் ஒன்றுபட்டு, ஏனைய சில கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழத்தான் செய்கின்றன. ஆனால், சிலருக்கு தேவைப்படுவதெல்லாம் அவர்களது கட்சி மட்டும் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நாம் எல்லோரும் ஒன்றுபட்டு ஆதரித்து ஆட்சியில் அமர்த்தினோம். நல்லாட்சி தொடர்பில் வாக்குறுதிகள் பல வழங்கப்பட்டன. அவை படிப்படியாக செயலுருப் பெற்று வருகின்றன.
அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு பாராளுமன்றத்துக்குள் சிலர் கூச்சல் எழுப்பி, குழப்பினாலும் அவை சாத்தியப்படாது. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் பற்றிய விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தியதை எல்லோரும் கண்டோம்.
இந்நாட்டில் இவ்வளவு காலமும் நல்லிணக்கத்திற்கு இடையூறாகயிருந்து வந்த ஆள் கடத்தல்கள் மற்றும் பலவந்தமான காணாமல் போதல் போன்ற இழிசெயல்களுக்கு வழிகோலிய சம்பவங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கடப்பாடும், தமது பிள்ளைகளைகளை பறிகொடுத்த பெற்றோர்களுக்கும், உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் விமோசனம் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு உண்டு.
அதுமட்டுமல்லாமல், அமைச்சர் கயந்த கருணாதிலகவின் அமைச்சின் ஊடாக தகவலறியும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ளும் மகத்தான வாய்ப்பு கிடைத்தது. உண்மையில், அந்த தகவலறியும் சட்டத்தின் பயனாக நாட்டின் ஊழல்களை கண்டுபடிப்பதற்கும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இயலுமாக இருக்கின்றது.
இது இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் பலப்படுத்தும் சட்டமாகும். நாட்டின் போக்கில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்த வல்லதாகும். யாரும் தான்தோன்றித் தனமாக நடக்காமல், அரசியல்வாதிகள் கூட தங்களது நடவடிக்கைகளை மாற்றியமைத்து கொள்ள வழிபிறக்கின்றது.
வெளிப்படைத் தன்மையோடு, நேர்மையாக நடந்து கொள்ளக் கூடிய சூழ்றிலையை ஏற்படுத்தியிருக்கின்றோம். தேசப் பற்று என்ற பதாதைகளை ஏந்திக்கொண்டு, நாங்கள் நாட்டை காட்டிக் கொடுப்பவர்கள் என்று கூறத் தொடங்கி இருப்பதுயிட்டு நாம் விழிப்பாக இருக்க வேண்டும்;. ஆங்கில கவிஞர் ஒருவர் கூறியிருப்பது போன்று 'தேசப்பற்று என்பது கயவர்களின் கடைசி அடைக்கலம்' ஆகும்.
அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமானால் இவ்வாறு கோஷம் எழுப்பிக்கொண்டு சென்றால் மட்டும் போதும் என நினைக்கின்றார்கள்.
எங்களது ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டை காட்டிக்கொடுப்பவர்கள் அல்லர். மிகவும் தூரநோக்குடனும், தூய போக்குடனும் அவர்கள் நாட்டின் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
யுத்தத்தை வெற்றிகொண்டதன் பின்னர், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களை தவறவிட்டுவிட்டார்கள். சர்வதேசத்தை வீணாகப் பகைத்துக் கொண்டார்கள். இதனால், பொருளாதார வாய்ப்புக்களை இழந்துவிட்டோம். இப்பொழுது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் வெளிநாட்டு முதலீடுகள் எங்களது நாட்டை நோக்கி வந்து குவிகின்றன.
நாட்டில் எனது அமைச்சின் கீழ் பல பாரிய நீர் விநியோகத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த காலி பிரதேசத்தில் மட்டுமல்லாது, ஏனைய கரையோரப் பிரதேசங்களிலும், அவற்றை அண்டிய உட் பிரதேசங்களிலும் பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போதைய நீர் விநியோகத் திட்டங்களில் சில குறைபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. தண்ணீரை கொண்டு செல்லும் விசையிலும், வேகத்திலும், குழாய்களின் விட்டத்திலும் குறைகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இயன்றவரையில் முயற்சித்து வருகின்றோம். அதற்கான சில தற்காலிக ஏற்பாடுகளை இப்பொழுது மேற்கொண்டுள்ளோம்.
எங்களது இந்த நல்லாட்சி அரசாங்க காலத்திற்குள் காலி மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் மட்டுமல்லாது, உள்நாட்டில் மக்களுக்கு சுத்தமான நீரை கொண்டு செல்வதில் மலைப் பாங்கான பிரதேசங்களிலும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம். அவற்றை இயன்றளவில் விரைவாக சீர்செய்வதற்கும், நீர்; சுனைகளையும், நீர் ஊற்றுக்களையும் கண்டுபிடித்து அவற்றிலிருந்து தூய நீரை பெறுவதற்கும், நவீன தொழில்நுட்பத்தை கையாண்டு நீரை உரிய முறையில் சுத்திகரித்து பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற அலுவல்கள், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காலி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் காலி மாநகர சபை உறுப்பினருமான ஹசன் சரீப் மற்றும் மதகுருமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.