காங்கேயனோடை பிரதான வீதி ரூபாய் 5 மில்லியன் செலவில் செப்பனிடுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் முன்னால் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் A.A.M. மதீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிதியானது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் விஷேட வேண்டுகோளின்பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. ஹாபீஸ் நசீர் அஹ்மத் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. ஹாபீஸ் நசீர் அஹ்மத், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், விஷேட அதிதிகளாக நகர திட்டமிடல், நீர் வளங்கள் அமைச்சின் இணைப்புச் செயலாளர் U.L.M.N.முபீன் (BA), காத்தான்குடி நகர சபையின் முன்னால் தவிசாளர் மர்சூக் அஹ்மத் லெப்பை, காத்தான்குடி இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளர் இல்மி அஹ்மத் லெப்பை, அப்பிரதேச பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இப்பெருமதிமிக்க இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றி பொறியியலாளர் ஷிப்லி பாறுக்...
இந்த ஊரைச் சேர்ந்த பல சகோதரர்கள் என்னை தொடர்புகொண்டு இவ்வீதியினை செப்பனிட்டுத் தருமாறு கேட்டிருந்தனர். அந்த வேண்டுகோளின் அடிப்பயைில் இன்று இந்த வீதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாவிலங்குதுறையூடாக மண்முனை பாலம் வரை 2.5 கிலோ மீட்டர் காபெட் வீதியினை ஐ-ரோட் எனப்படும் திட்டத்தினூடாக அமைப்பதற்கு முயற்சி செய்திருந்தோம். தற்போது அதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்கின்ற ஒரு செய்தியை முதலமைச்சரவர்கள் சொல்லியிருக்கின்றார்.
மேலும் இந்த வீதிகளை அமைக்கின்ற போது மிகவும் தரமான வகையில் அமைக்கப்பட வேண்டும் என்கின்ற விடயத்தை இந்த வீதியினை செப்பனிடும் பணியை செய்கின்ற கொந்துராத்துகாரர்களிடம் சொல்லியிருப்பதோடு நான் தனிப்பட்ட முறையில் கவனமெடுத்து இவ்வீதியின் புனரமைப்பு பணிகளை மேற்பார்வை செய்யவுள்ளேன். ஏனெனில் இதற்கு முன்னர் இங்கே போடப்பட்ட பல வீதிகள் குறுகிய காலத்திற்குள்ளே அவை மிகவும் மோசமாக சேதமடைந்து போக்குவரத்திற்கு மக்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
இனிமேல் அமைக்கப்படுகின்ற வீதிகள் அவ்வாறு இருக்கக்கூடாது. வீதி அபிவிருத்திகளில் மட்டுமல்லாது கல்வி அபிவிருத்தியிலும் நாங்கள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம், அந்த வகையில் அல்-அக்ஸா பாடசாலையினை 600 பாடசாலைகள் திட்டத்திற்குள் உள்வாங்கியிருக்கின்றோம். அப்பாடாசாலை அபிவிருத்தி செய்யப்படுகின்றபோது 20 கோடி ரூபாய் வரையிலான நிதி செலவளிக்கப்பட இருக்கின்றது.
மேலும் எதிர்காலத்தில் இந்த ஊரிருள்ள வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்து அதனை மக்களுக்கு மிகவும் பயனுள்ள வரையில் அமைக்க இருக்கின்றோம். நான் இவ்வூருக்கு வருகின்றபோது கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தையுடையவர்களுக்கு பயனளிக்கக்கூடிய தாய்-சேய் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைத்துத் தருமாறு என்னிடம் அடிக்கடி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அவர்களிடம் பேசியபோது தற்போது சுகாதார பணிகளுக்காக திட்டமிடப்பட்டுள்ள வேலைகளுக்கான கொந்துராத்துகள் வழங்கப்படுகின்ற போது அதிலே மீதப்படுகின்ற பணத்தில் இவ்வூருக்கான தாய்-சேய் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்திருக்கின்றார் என்று தனதுரையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.