ஏறாவூர் நிருபர ஏஎம் றிகாஸ்-
கிழக்கு பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் சுதந்திரமான கல்விக்கு இடமளிக்கப்படவேண்டுமெனக்கோரி 25.08.2016 வியாழக்கிழமை மாணவர்கள் முழுநாள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமாக வந்த மாணவர்கள் வந்தாறுமூலை வளாக பேரவைக் கட்டடத்தை முற்றுகையிட்டு அங்கு அமர்ந்திருந்தனர். எனினும் அலுவலக நடவடிக்கைளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 98 சதவீதமானவர்கள் பெரும்பான்மை இன மாணவர்களாகும்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில்
31 மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பது சத்தியாக்கிரக போராட்டக்காரர்களது பிரதான கோரிக்கைகளாகும். மேலும் மாணவர்களுக்கு போதியளவு அடிப்படைவசதிகள் ஏற்படுத்த வேண்டும் சிற்றுண்டிச்சாலையில் காணப்படும் வசதியீனம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். மாணவர்கள் சுதந்திரமாக கல்வியைத் தொடர வழிசெய்ய வேண்டும் என்பனபோன்ற பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் முறைகேடாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் வரை 24 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இத்தொகை 31 ஆக அதிகரித்துள்ளதாக மாணவர் அமைப்பின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் அமைக்கப்பட்ட மாணவர் விடுதிக்கட்டடங்களை திறந்துவைப்பதற்கென கடந்த வாரம் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த போதிலும் மாணவர்களின் போராட்டம் காரணமாக கட்டடங்கள் திறக்கப்படாதுள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழக சமூகம் கவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை இம்மாணவர்கள் கடந்த பலநாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பாகக் கேட்பதற்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரீ.ஜெயசிங்கத்துடன் தொலைபேசிமூலம் தொடர்புகொள்ள பல தடவைகள் முயற்சித்தபோதிலும் அவர் பதிலளிக்கவில்லை.