காரைதீவு நிருபர் சகா-
சாய்ந்தமருதிற்கான பிரதேசபையைப் பெற்றுத்தருவதென்பது ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைமையின் தார்மீகக்கடமை. எந்தக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லை. மிகவிரைவில் அது கிடைக்கும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகரதிட்மிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று சாய்ந்தமருதில் தெரிவித்தார். சாய்ந்தமருது பிரேவ்லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 36வது வருட நிறைவையொட்டி சாய்ந்தமருது வொலிவேரியன் மைதானத்தில் நடாத்தப்பட்ட நொலேஜ் மேர்கண்டைசிங் கிண்ணத்திற்கான கடினபந்து கிரிக்கட் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
இந்நாட்டின் பிரதமர் ரணில்விக்ரமசிங்க கல்முனையில் நடைபெற்ற எமது தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசுகின்றபோது உறுதியளிக்கப்பட்ட விடயம்தான் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேசசபை என்பது. எனவே அதனை அவர் மீறமாட்டார். எனவே சாய்ந்தமருதிற்கான பிரதேசபையைப் பெற்றுக்கொடுப்பதென்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை. விரைவில் அது கிடைக்கும்.
நிலைமை இவ்வாறிருந்தும் சாய்ந்தமருதில் சிலர் விசமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டுவருவது கவலைக்குரியது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் குடியேற்றக்கிராமம் இது. இப்பகுதியில் இருந்த ஒரேயொரு விளையாட்டுமைதானம் தாமரைக்குளம் மைதானமாகும். ஆனால் சுனாமிக்குப்பிறகு அங்கு வைத்தியசாலை அமைக்கப்பட்டது.ஆதலால் மைதானமில்லாத குறையிருந்தது.
அதற்குப்பதிலாக இங்கு அமைக்கப்பட்டுள்ள இம்மைதானம் அபிவிருத்திசெய்யப்படவேண்டும். இங்கு எம்முடன் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் ஹரீஸ் இருக்கிறர். அவர் இதனை நன்கு நவீனமயப்படுத்தப்பட்ட மைதானமாக மாற்றித்தருவார். நானும் தேவையான நிதியை வழங்கக் காத்திருக்கின்றேன். இப்பிரதேசம் நவீனநகரமாக மாறும். மாற்றித்தருவோம்.
இங்கு நிம்மதியாக நல்லதொரு கிரிக்கட் சமரைப்பார்த்தோம். இப்போட்டியில் வெற்றிபெற்ற காரைதீவு விளையாட்டுக்கழகத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும் வாழத்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
சாய்ந்தமருது பிரேவ்லீடர்ஸ் அணியை பலவித நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுத்த தலைவர் மசுட் மற்றும் உறுப்பினர்களை வாழ்த்துக்கின்றேன்.
இப்போட்டிக்கு அனுசரணையாளரான ஹக்கீப் பாராட்டுக்குரியவர். என்றார்.
பிரேவ்லீடர்ஸ் அணியை 8ஓட்டங்களால் வெற்றிகொண்டு காரைதீவு விளையாட்டுக்கழகம் சாம்பியனாகி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது. அமைச்சர் ரவூப்ஹக்கீம் வெற்றிக்கிண்ணத்தை அணித்தலைவர் லோ.சுலக்சனிடம் வழங்கி வாழ்த்துத்தெரிவித்தார்.
கௌரவ அதிதிகளாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நொலேஜ் மேர்கண்டைசிங் முகாமைத்துவ பணிப்பாளர் ஹக்கீக் ஏ ஹபீல் சிறப்பதிதி கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எ.டபிள்யு. அப்துல்கபார் அதிதி பிறேவ்லீடர்ஸ் கழகத்தலைவர் எம்.எஸ்.எம்.மசூட் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் போசகர்களான வே.இராஜேந்திரன் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.