தேசிய அரசியலில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்கு என்ன...?

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ரசியல் என்பது நீதியை நிலை நாட்டுவதாக இருக்க வேண்டும் என்பது ஒரு முஸ்லிமினுடைய அரசியல் இலட்சியமாகும். அத்தோடு அது ஒரு முஸ்லிமினுடைய அரசியல் இலட்சியம் என்பதற்கு அப்பால் இந்த நாட்டினுடைய ஜனநாயகம், இடதுசாரி அரசியல், சோசலிசமும் எல்லாம் அரசியல் என்பது நீதியினை நிலை நாட்ட வேண்டும் என்பதே எடுத்துச் சொல்கின்றது. சமூக நீதியினை நிலை நிறுத்துவதற்கான அரசியல் வேலைத்திட்டம் உரிய அர்த்தங்களோ அமுல்படுத்தப்படாமல் இருப்பதுதான் இங்கு துரதிஸ்ட்டவசமான முறையாக பார்க்க வேண்டியதாக இருக்கின்றது.

எனவே முஸ்லிம்களாககிய எங்களுடைய அரசியல்வாதிகள் நீதியான அரசியலினை எவ்வாறு கையாளுவது என்ற பாரிய பிரச்சனைகளுக்குள் முகம்கொடுத்தவர்களாகவும் அதற்குள் புகுத்தப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். அரசியல் ஒரு கட்டுக்கோப்பான தலைமைத்துவம் இருக்க வேண்டும், அரசியலினுடைய அடிப்படையில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும், அரசியல் மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், அரசியல் கலாச்சாரம் நாகரீகமாக இருக்க வேண்டும், அரசியலில் இருக்கின்ற வன்மமும், பகை உணர்வுகளும் நீங்கி தேசிய அரசியலில் சகோதரத்துவ அனுகுமுறைக்குள் கொண்டு வரப்பட வேண்டும். எல்லா வற்றிற்கும் மேலாக நேர்மையும், தர்மமும் இருக்க வேண்டும் என்பது மிகக் கட்டாயமான விடயங்களாகும் என்பதனை இங்கு முதலில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் நாட்டில் முஸ்லிம்களினுடைய பிரச்சனைகளைப் பற்றி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றார்களா என்பது ஒரு புறமிருக்க இந்த நாட்டிலே பாராளும்ன்றத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய தேசிய பிரச்சனைகள் சம்பந்தமாக ஏன் குரல் கொடுக்க மறுக்கின்றனர் என்பது இலங்கையின் சிறுபான்மை அரசியலில் இருக்கின்ற யதார்த்த பூர்வமாகவு தூர நோக்குடனும் சிந்திக்க வேண்டிய பிரச்சனையாகவே இருக்கின்றது.

மிக முக்கியமாக தேசிய அரசியலினை எடுத்து கொண்டால் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதி நித்தித்துவம் இல்லாத சந்தர்ப்பங்களே இல்லை என்பது உண்மையே. அதே போன்று வடக்கு, கிழக்கு மேல் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் என முஸ்லிம்களினுடைய அரசியல் பங்கும் அதன் விகிதாசாரமும் சந்தோசம்படும் அளவிற்கு தற்பொழுதைய அரசியல் அமைப்பு சட்டத்தில் காணப்படுவது பெருமைக்குறிய விடயமாகும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களினுடைய அடிப்படை உரிமைகள் அதனோடு சேர்ந்த பிரச்சனைகள், அபிவிருத்திகள் போன்றவைகளுக்கு எந்த அளவு குரல் கொடுக்க கடமைப்பட்டிருக்கின்றார்களோ அதே போன்று பல மடங்கு தேசிய அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க கடமைப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேதான் தேசிய அரசியலில் அங்கம் வகிக்கின்ற பெரும்பான்மை கட்சிகளினதும், பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற நியாயகரமாக சிந்திக்கின்ற மக்களின் அபிமானத்தினையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் வென்றெடுக்க முடியும் என்பது பலரது கருத்தாக இருக்கின்றது.

பொதுவாக இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு எதிரான பேறுவளை சம்பவங்கள், பொதுபலசேனாவினுடைய அராஜகங்கள், மாவனல்லை பிரச்சனை, ஹலால் பிரச்சனை, பள்ளிவாயல்கள் உடைப்பு, முஸ்லிம்களினுடைய அடிப்படை உரிமைகள் மற்றும் இஸ்லாமிய கலாச்சாரம் சம்பந்தமான பிரச்சனைகள், வடகிழக்கில் வாழ கூடிய முஸ்லிகளினுடைய அடிப்படை உரிமைகள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கெல்லாம் இதைய சுத்தியோடும், தங்களினுடைய அரசியல் இருப்பினை எதிர்காலத்தில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் குரல்கொடுக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் நாட்டினுடைய தேசிய அரசியலில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கும் ஏனைய சமூகத்தினுடைய அடிப்படை மனித உரிமைகளுக்கும் குரல் கொடுக்க தவறுகின்றனர் என்பதே இக்கட்டுரையின் வாயிலாக நான் கூற முற்படுகின்றேன்.

அந்த வகையிலே தேசிய அரசியலில் முஸ்லிம் அரசியல்வாதிகளினுடைய பங்களிப்பு என்ன? பொதுவாக இந்த நல்லாட்சி அரசாங்க ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் அர்ஜுனா மஹேந்திரவின் வரி சம்பந்தமான பிரச்சனை தேசிய அரசியலிலே பூதாகரமாகப்பட்டு பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறு பல பிரச்சனைகள் தேசிய அரசியலிலே ஏற்படுகின்றன. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இருப்பினை எவ்வாறு எதிர்காலத்தில் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றார்களே தவிர தேசியத்தில் இடம் பெறுகின்ற பிரச்சனைகளுக்கு மெளனம் சாதித்தவர்களாகவே இருக்கின்றார்கள்.

மறுபக்கத்தில் பார்க்க போனால் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலிததேவபெறும பேறுவளை முஸ்லிம்களினுடைய பிரச்சனைகளுக்கு மிக பகிரங்கமாக குரல் கொடுத்த ஒருவராகவும் ரன்ஞன் ராமநாயக்க றிசானா றபீக்கினுடைய மரண தண்டைக்கு எதிராக உலகம் திரும்பிப் பார்க்கும்படி குரல் கொடுத்த பெருமைக்குறியவராகவும் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த அரசியல்வாதியாக காணப்படுக்கின்ற அதே இடத்திலே அமைச்சர் ராஞித சேனாரத்ன, மஹிந்த சமரசிங்க போன்றவர்கலெல்லாம் சிறுபான்மை சமூகத்திற்கு இருக்கின்ற பிரச்சனைகளுக்கு எதோ ஒரு வகையிலே குரல் கொடுக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள். அதே நேரத்தில் முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்தி நல்லாட்சிக்சிகான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இதுவரைக்கும் பாராளுமன்ற கதிரையில் உட்காரா விட்டாலும் தேசிய அரசியலில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கின்ற ஒருவராக இருக்கின்றார் என்பத்னை இங்கு ஞாபகப்படுத்தி கொள்கின்றேன்.

எங்கு முஸ்லிம்களினுடைய பள்ளிவாயல்கள் உடைக்கப்படுகின்றதோ அப்பொழுது தங்களுடைய அரசியல் இருப்பினை தக்கவைத்து கொள்வதற்காக குரல் கொடுக்க துடிக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் தேசிய அரசியலிலும், ஏனைய சமூகத்தின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற அரசியல்வாதிகளாக மாற வேண்டும் என்பது முக்கியமான விடயமாகும்.

பொதுவாக பார்க்க போவோமானால் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் சேர்ந்து எக்ட்டா எனும் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்ட இருக்கின்றது. இது சம்பந்தமாக எவராவது ஒருவர் முஸ்லிம் அரசியல்வாதியாக குரல் கொடுத்திருக்கின்றார்களா? இல்லவே இல்லை. குஜராத்திலே முஸ்லிம்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றார்கள், என்பதற்காகவும், காஸ்மீரிலே தங்களது அடிப்படை உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடுகின்றார்கள் என்பதற்காகவும் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு எனும் மனித கொன்றொழிப்பு செய்யும் நரபலி மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம்களினுடைய உரிமைகளை பற்றி தேர்தல்காலங்களில் பேசுகின்ற எமது கலீமா சொன்ன முஸ்லிம் அரசியல்வாதிகள் இலங்கை பாராளுமன்றத்திலே குரல் கொடுக்காமைகான காரணம்தான் என்ன என்பது புரியாத கதையாகவே இருப்பதானது மனவேதனை அளிக்க கூடிய விடயமாகும்.

தேர்தல் காலங்களில் மக்களினுடைய நலனுக்காக குரல் கொடுக்கின்றோம் என மேடைகளில் மார்தட்டிக்கொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களினுடைய நலினை பாதிக்கின்ற தேசிய அரசியலில் கொண்டு வரப்பட்ட முக்கிய விடயமானதும் பிரச்சனையானதுமான வரி சம்பந்தமான பிரச்சனைக்கு ஏன் குரல் கொடுக்க தவறிவிட்டனர் என்பதுவே முக்கிய கேள்வியாகும். இந்த நேரத்திலே மக்களினுடைய சுமையானது அதிகரிக்கப்பட்ட அதே நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அணைத்து சலுகைகளும் கிடைக்க பெற்றே இருந்தன.

ஆனால் மறுபக்கத்தில் மக்களினுடைய வரிச்சுமை அதிகரிக்கும் அதே நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுகான சலுகைகள் அதிகரிக்கப்பட்டமையினால் பெரும்பான்மை கட்சியில் அங்கம் வகித்த பாலித தேவபெரும, ஹர்சடீ சில்வா மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் போன்றவர்கள் மட்டுமே சலுகைகளை நிராகரித்திருந்தனர். ஆனால் தேசிய அரசியலிலே முக்கிய பிரச்சனையாகவும் மக்களினுடைய சுமையினை அதிகரிக்க கூடிய அபாயகரமான வரி பிரச்சனைக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணைவரும் மெளனித்து வாய் மூடி இருக்கின்றமையானது ஜனநாயக அரசியலிலே நீதியினை நிலை நாட்ட கூடியதாக இருக்கின்றதா என்ற கேள்விக்கு விடை அளிக்க முடியாத விடயமாகவே மாறிவருகின்றது.

புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதென்பது முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நாட்டிலே தற்பொழுது பேசப்பட்டு வருக்கின்ற தேர்தல் திருத்த முறைமையானது எதிர்காலத்தில் முஸ்லிம்களினுடைய அரசியல் இருப்பிற்கு பாதகமாக உறுவாக்கப்பட்டலாம் என்ற கருத்தும் பரவலாக பேசப்படும் விடயத்தினையும் சாதாரணமக அறியக்கூடியதாகவே இருக்கின்றது.. இருக்கின்ற விகிதாசார தேர்தல் முறைமையானது இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு பாதகம் அல்லாத முறையாக இருந்தாலும் அண்டை நாடான இந்தியாவில் இருபது கோடி முஸ்லிம்கள் வாழ்ந்தும் அவர்களுடைய பிரிட்டனை ஒத்ததாக இருக்கின்ற தேர்தல் முறைமை காரணமாக முஸ்லிம்களின் பிரதிநித்திதும் முற்றாக இழக்கப்பட்டு முஸ்லிம்களினுடைய உரிமைக்குரலானது இந்திய பாராளுமன்றத்திலே செல்லாக்காசாக மாற்றப்பட்டிருப்பதனை நான் இங்கு முக்கியமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எப்பொழுது வாயினை திறந்தாலும் முஸ்லிம்களினுடைய ஒற்றுமையினை பற்றி பேசுபவர்களாக இருக்கும் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில்தான் ஒன்றுபட முடியவில்லை என்பதும் அல்லது அவர்களினுடைய அரசியல் போட்டியாக மாறும் பட்சத்தில் அவர்களினால் ஒன்றுபட முடியவில்லை என்பது அவர்களே அவர்களுக்கு கூறிக்கொள்ளும் காரணமாக இருக்கின்றது. 
தற்பொழுது நாட்டில் உள்ள நிலைமையானது தேர்தலோ அல்லது அரசியல் சூடு பிடிக்காத காலமாக இருக்கின்றது.

ஆகவே எமது முஸ்லிம் அரசியல்வாதிகளை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் யாப்பு சீர்திருத்தம் சம்பந்தமக ஒரே மேசையில் இருந்து இது வரைக்கும் கலந்துரையாடி ஒரு முஸ்லிம் சமூகம் சார்ந்த அரசியல் சம்பந்தமான ஒரு முடிவிற்கு வராமையானது மிகவும் மன வேதனை அளிக்கின்றது. ஒரு கட்டத்தில் இந்தியாவிலே முஸ்லிம்களினுடைய பிரதி நிதித்துவங்களை இல்லாமல் செய்திருக்கும் இந்தியாவினுடைய அரசியல் யாப்ப்பு சீர் திருத்தமானது இலங்கை அரசியலிலும் முற்றாக அமுல்படுத்த படுமாயின் முஸ்லிம் அரசியல்வாதிகள் அப்பொழுதும் தங்களினுடைய சுயநல அரசியலுக்காக மெளனித்தே இருப்பார்கள் என்பதில் எவரிடமும் மாற்று கருத்திருக்காது.

தகவலறியும் சட்டம் மக்களுக்கு பிரயோசனமான வகையில் உடனடியாக அமுலாக்கம் செய்யப்பட வேண்டும்; மக்கள் அதனைப் பயன்படுத்தவும் வேண்டும். தகவல் அறியும் சட்ட மூலம் தற்போது அமுலுக்கு வந்துள்ளதானது நல்லாட்சியை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். அதேவேளை, இதனை செய்வதற்கு இத்தனை மாதங்கள் தாமதித்தமையானது எவ்வகையிலும் நியாயப்படுத்தக் கூடியதுமல்ல. இந்த நிலையில் இச்சட்ட மூலத்தை முறையாக அமுல்படுத்துவதற்கான கட்டமைப்புகளை தாமதமின்றி அரசாங்கம் உருவாக்கவும் வேண்டும். அதுபோலவே, இச்சட்ட மூலத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும் பொதுமக்கள் முன்வர வேண்டும்.

மிக நீண்ட காலமாக இலங்கையில் எதிர்பார்க்கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் கூட , இதனை அமுலுக்கு கொண்டு வருவதில் ஏற்படுத்தப்பட்ட தாமதம் கவலையளிக்கிறது.
நல்லாட்சி என்பதன் அடிப்படைப் பண்புகளில் ஒன்று வெளிப்படைத் தன்மையாகும். அதற்கு நடை முறைவடிவம் கொடுக்க வேண்டும் என்றால் தகவல் அறியும் சட்டம் என்பது மிகவும் அத்தியவசியமாகும். இந்த தகவல் அறியும் சட்டத்தின் பலனாகவே இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மோசடிகளை முறியடிக்க முடிந்திருக்கிறது.

அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை சட்ட பூர்வமாக இலங்கை மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக பலமாக முன் வைக்கப்பட்டு வந்துள்ளது. இதில் முஸ்லிம் அரசியல்வாதிகளினுடைய அழுத்தமும் பங்களிபும் எந்தளவில் இருந்தது, இருக்கின்றது என்பதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்து நடக்க கடமைப்பட்டுள்ளனர்.

சாதரண அப்பாவி மக்கள் அரசியல் என்பது கான் கட்டுவது, வீதிகளை அபிவிருத்தி செய்வது, வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது, அல்லது பாடசாலை பொதுக்கட்டங்களை பெரிதாகவும் அழகாகவும் கட்டுவது மட்டும்தான் என நினைத்து கொண்டிருக்கின்றனர். எமது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு நியாயமான அரசியல் என்பதும் அரசியல் என்றால் என்ன என்பது பற்றியும் தமக்கு வாக்களித்த மக்களுக்கும் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளனர். அதே நேரத்திலே நாங்கள் வாழுகின்ற எமது நாட்டின் தேசிய அரசியலிலே முஸ்லிம் சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திலும் தேசிய அரசியலிலும் அங்கம் வகின்ற நாங்கள் தேசியல் அரசியல் எனும் வட்டத்தினும் தாம் ஆற்றியுள்ள, சாதித்துள்ள விடயங்கள் என்ன என்பதனை பற்றி சிந்தித்து கடமையாற்ற வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது.

அந்த வகையிலே உண்மையான இறையச்சமும் அதன் பிரதிபலிப்பான மனச்சாட்சியும் தர்மமும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் இருக்குமேயானால்.,
நமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று உண்மையை தேடி அறிந்து கொள்ளும் அவாவும் வேகமும் அவர்களிடத்தில் நிச்சயம் இருக்கும்.
பொய்களைப் நிராகரித்து நமக்கு பிடிக்காதவர்களின் பக்கம் உள்ள நியாயங்களை தயங்காமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இருக்கும்.
முஸ்லிம் அரசியல்வதிகளிடம் இருக்கும் தவறுகளை அவர்களே ஏற்றுக்கொள்ளும் தைரியம் இருக்கும்.
அமானிதங்களையும் வாக்குறுதிகளையும் என்ன விலை கொடுத்தாதவது பாதுகாக்கும் மன உறுதி முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் இருக்கும்

அப்போதுதான் சௌகரியத்தின் பக்கம் நிற்காது சத்தியத்தின் பக்கம் நின்று நியாயத்தை உரத்துச் சொல்லும் மனோ நிலையும் தைரியமும் உருவாகும்.
அசத்தியத்திலிருந்து சத்தியத்தினையும் , தீமைகளிலிருந்து நன்மையினையும், பொய்களிலிருந்து உண்மையினையும் பிரித்தறிவதும் இலகுவாக அமைகின்ற பொழுது தேர்தல் காலங்களில் மட்டும் தங்களினுடைய இருப்பினை தக்க வைத்து கொள்ளும் பொருட்டு முஸ்லிம்களினுடைய உரிமைகளை பற்றி பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருக்காமல் தேசிய அரசியல் இருக்கின்ற பிரச்சனைகள் சம்பந்தமாக ஏனைய சமூகங்களினுடைய பிரச்சனைகளை பேசுக்கின்ற உண்மையான முஸ்லிம் அரசியல்வாதிகளாக முஸ்லிம் அரசியல்வாதிகள் மாற்றமடைவார்கள் என்பது எனது கருத்தாக இருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -