இறக்காம பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக அப்பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.
இறக்காம பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த வருடம் கல்விக் கல்லூரிகளில் இருந்து பயிற்சிகளை நிறைவு செய்து ஆசிரியர் நியமனங்கள் பெறவுள்ள இறக்காம பிரதேச ஆசிரியர்களை கிழக்கு மாகாண சபைக்கு வழங்கி இறக்காமப் பிரதேச பாடசாலைகளுக்கு இவ்வாசிரியர்களை நியமிக்குமாறு கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் கோரிக்கை விடுத்தார்.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை அவரது அமைச்சுக் காரியாலயத்தில் அண்மையில் சந்தித்த போதே அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.
தொடர்ந்தும் அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அம்பாறை மாவட்ட இறக்காமப் பிரதேசப் பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை அவசரமாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி கிழக்கு மாகாண சபையில் தன்னால் தனிநபர் பிரேரனை கொண்டு வரப்பட்டு மத்திய கல்வி அமைச்சரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் இறக்காம பிரதேசப் பாடசாலைகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபையில் ஏகமானதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையில் ஏகமானதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரதி, இறக்காமப் பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக இறக்காமப் பிரதேச பள்ளிவாசல் சம்மேளனத்தின் கோரிக்கையின் பிரதியினையும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம்; கையளித்து அப்பிரதேச கல்வி நிலமை தொடர்பிலும் கல்வி அமைச்சரிடம் கலந்தரையாடினேன்.
இக்கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட கல்வி அமைச்சர் இந்த வருடம் கல்வி கல்லூரிகளிலிருந்து பயிற்சிகளை நிறைவு செய்து ஆசிரிய நியமனங்கள் பெறவுள்ள இறக்காமப் பிரதேச ஆசிரியர்களை கிழக்கு மாகாண சபைக்கு வழங்கி இறக்காம பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வியியல் பிரிவு ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார் எனவும் அவர் உதுமாலெப்பை மேலும் தெரவித்தார்.
இச்சந்திப்பின் போது இறக்காமப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூரும் கலந்து கொண்டார்.