முஸ்லிம்கள் தமது குர்பான் கடமைக்காக மாடுகளை பள்ளிவாசல்களிலும் பொது இடங்களிலும் வீடுகளிலும் அறுப்பதற்கு தடை விதிக்குமாறும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் சிங்கள ராவய அமைப்பு உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையார்கள் மற்றும் செயலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ள மாடுகள் அறுக்கும் மடுவங்களில் மாத்திரம் மாடுகள் அறுக்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறில்லையேல் இனங்களுக்கு இடையில் குரோதங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் எனவும் சிங்கள ராவய அமைப்பு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
நாட்டில் மாடுகள் அறுப்பதற்கு அனுமதியிருந்தாலும் சட்டம் இருந்தாலும் முஸ்லிம்கள் அந்தச் சட்டத்தை மதியாது விசேடமாக குர்பான் காலத்தில் மாடுகளை அறுக்கிறார்கள்.
அறுக்கப்படும் மாடுகளுக்கான அனுமதி உள்ளூராட்சி மன்றங்களிடம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். மாடுகளை போக்குவரத்து செய்வதற்கான அனுமதி பொலிஸ் நிலையங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். மாடுகள் கர்ப்பம் தரித்திருக்கக் கூடாது. மாடுகளை வாகனங்களில் சித்திரவதைக்குள்ளாகும் வகையில் போக்குவரத்து செய்யக்கூடாது போன்ற சட்டங்கள் எமது நாட்டில் அமுலிலுள்ளன.
இந்தச் சட்டங்கள் சரியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஒரு இனம் மாடுகளை தெய்வங்களாக வழிபடுகிறது. அதனால் அந்த இன மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அதனால் மாடுகள் அறுப்பதற்காக நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டம் கடுமையாக அமுல் நடத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.